இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினால் சிறை... அமித்ஷா எச்சரிக்கை
ஜபல்பூர்: இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்புவோர் சிறைவாசத்தை அனுபவிக்க நேரிடும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்தது. ஆனால் இதனை அமல்படுத்த முடியாது என மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜபல்பூரில் சி.ஏ.ஏ. விளக்க பொதுக்கூட்டத்தில் இன்று பேசியதாவது:
சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவு
ஒட்டுமொத்த இந்தியாவும் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக இருக்கிறது. ஆகையால் தேசத்தின் மனநிலை என்ன என்பதை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும்.
சி.ஏ.ஏ. இதுதான்...
குடியுரிமை சட்ட திருத்தம் என்பது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் துன்புறுத்தலுக்குள்ளாகும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், கிறிஸ்துவர்கள், பார்சிகள் அகதிகளாக வந்தால் இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது. ஆனால் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான பொய்யான தகவலை பரப்புகின்றனர்.
மமதா, ராகுலுக்கு சவால்
இச்சட்டத் திருத்தத்தில் இந்திய குடிமக்களின் குடியுரிமை பறிக்கப்படும் என்பது இடம்பெற்றுள்ளதா?. இப்படி ஒரு வாசகம் இருக்கிறது என்பதை மமதா பானர்ஜியும் ராகுல்காந்தியும்தான் விளக்க வேண்டும்.
சிறைதான்
ஜே.என்.யூவில் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியுள்ளனர். அப்படி முழக்கங்களை எழுப்புவோர் சிறைவாசம் அனுபவிக்க தகுதியானவர்கள்தான்.
4 மாதங்களில் ராமர் கோவில்
காங்கிரஸ் கட்சியின் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், ராமர் கோவிலை கட்ட முடியாது என கூறுகிறார். கபில்சிபல்ஜி, இன்னும் 4 மாதங்களில் விண்ணை தொடும் ராமர்கோவிலை அயோத்தியில் கட்டி முடிப்போம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.