கார்பைடு வைத்து பழங்களை பழுக்க வைப்பவர்கள் “தீவிரவாதிகள்”- ஆந்திரா ஹைகோர்ட் அதிரடி!
ஹைதராபாத்: இயற்கையான காய்களைப் பழுக்க வைக்க கார்பைடு ரசாயனப் பொருளைப் பயன்படுத்துவது தீவிரவாதத்தினை விடக் கொடுமையானது என்று ஆந்திரா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காய்களை பழுக்க வைக்க கார்பைடு என்ற ரசாயன பொருள் பயன்படுத்துவது குறித்து தொடரப்பட்ட வழக்கில் ஆந்திர உயர்நீதிமன்றம் நேற்று அளித்த உத்தரவில், "காய்களை உடனடியாக பழுக்க வைக்க "கார்பைடு" என்ற ரசாயன பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பழங்களை சாப்பிடுவதால் உடலில் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுகிறது.
ரசாயன பொருள் மூலம் காய்களை பழுக்க வைக்கும் முறை தீவிரவாத செயலை விட மிகவும் பயங்கரமானது. இதனால் ஆந்திரா, தெலுங்கானாவில் கார்பைடு பயன்படுத்தி காய்களை பழுக்க வைக்கும் முறைக்கு தடை விதிக்கப்படுகிறது.
கார்பைடுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அது வியாபாரிகளுக்கு எப்படி கிடைக்கிறது என்பதை கண்டறிய வேண்டும் பழக்கடைகளில் அதிகாரிகள் சோதனையிட வேண்டும்.
கார்பைடு பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க இரு மாநில அரசுகளும் எடுக்கும் நடவடிக்கை குறித்து உடனடியாக கோர்ட்டுக்கு தெரியபடுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.