மின்சாரத்தை திருடுவோரை செருப்பால் அடிக்க வேண்டும்: உ.பி. ஆளுநர்
லக்னோ: மின்சாரம் திருடுவோரை காலணியால் அடிக்க வேண்டும் என்று உத்தர பிரதேச ஆளுநர் ராம் நாயக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
மின்சாரம் திருடுபவர்கள் மிகவும் மோசமானவர்கள். அதனால் அவர்களை தெருவில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்று நான் முன்பு தெரிவித்திருந்தேன். எந்த விஷயத்திற்காகவும் யாரையும் தூக்கிலிடக் கூடாது என்று சிலர் தெரிவித்துள்ளனர். அதனால் நான் கூறியதை திருத்திக் கொள்கிறேன்.
மின்சாரம் திருடுபவர்களை தூக்கிலிடக் கூடாது. மாறாக அவர்களை பொது இடத்தில் நிற்க வைத்து காலணிகளால் அடிக்க வேண்டும். இந்தியாவில் மின் பற்றாக்குறை அதிகம் உள்ளது. அதே சமயம் உலகிலேயே இந்தியாவில் தான் மின்சாரத் திருட்டும் அதிகம் உள்ளது.
இன்றைய உலகில் அனைத்து துறைகளிலும் நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். நாடு முன்னேற போதுமான மின்சாரம், நல்ல உள்கட்டமைப்பு, மனிதவளங்கள் தேவை என்றார்.