எதிர்ப்புக்கு பயமில்லை.. தேசிய பாதுகாப்பே முக்கியம்: என்டிடிவி தடை பற்றி விசாரணை குழு திட்டவட்டம்
தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் எந்தவிதமான சமரத்துக்கும் இடம் அளிக்க இயலாது என்று என்டிடிவி ஒளிபரப்பு தடை செய்யப்பட்டது சம்பந்தமாக விசாரணை நடத்திய குழு அறிவித்துள்ளது.
டெல்லி: ஊடக நெறிமுறைகளை மீறி பதான்கோட் தாக்குதல் சம்பந்தப்பட்ட செய்திகளை ஒளிபரப்பியதாகக் கூறி என்டிடிவிக்கு விதிக்கப்பட்ட ஒரு நாள் தடைக்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து விளக்கம் அளித்துள்ள விசாரணைக்கு குழு தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ள இயலாது என்று தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பும் ஊடக நெறிகளை மீறி ஒளிபரப்பு செய்த செய்தி நிறுவனங்கள் மீது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் இராணுவ முகாமில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவி வந்த பயங்கரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து செய்தி ஒளிபரப்பிய என்டிடிவி நிறுவனம் வெடி பொருட்கள் குவிக்கப்பட்டுள்ள இடம், பள்ளிகள் மற்றும் குடியிருப்பு அமைவிடம் குறித்த விவரங்களை வெளியிட்டது.
இது சம்பந்தப்பட்ட இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வழி வகுக்கும் என்பதால் இவ்வாறான தகவல்களை ஊடக நெறிமுறைகளை மீறி வெளியிட்டதாகக் கூறி என்டிடிவி நிறுவனத்துக்கு ஒரு நாள் ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டது.
இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். மேலும், ஊடக ஆசிரியர் சங்கமும் கடும் அதிருப்தி வெளியிட்டது. இதுபோன்ற செய்திகள் தேசிய பாதுகாப்புக்கும், குடிமக்கள், பாதுகாப்பு படையினருக்கும் ஊறு விளைவிக்கும். மேலும், என்டிடிவி நிறுவனத்துக்கு உரிய விளக்கம் அளிக்க போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சக விசாரணைக்குழு தேசிய பாதுகாப்பு விவகாங்களில் எந்தவிதமான சமரசத்தும் இடம் அளிக்க இயலாது என்று தெரிவித்துள்ளது.
ஊடக நெறிகளை மீறி ஒளிபரப்பு செய்தி சேனல்களை அதிகபட்சமாக இரண்டு மாதம் வரை தடை செய்ய வழி வகை உள்ளது. இந்நிறுவனம் பல முறை ஊடக நெறிக்கு புறம்பாக செய்தி வெளியிட்டுள்ளது. என்டிடிவி பதான்கோட் தாக்குதல் செய்தியை பொறுப்பற்ற வகையில் ஒளிபரப்பு செய்துள்ளது.
எனவே, வருகிற 9-ம் தேதி ஒரு நாள் மட்டும் ஒளிபரப்பு சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கு 30 நாட்கள் வரை தடைவிதிக்க இயலும். இது போன்ற நடவடிக்கைகள் 2005-ம் ஆண்டு முதல் எடுக்கப்பட்டு வருகிறது.
ஊடக நெறிகளை மீறி செய்தி வெளியிட்டதாக 21 முறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஒன் இந்தியா செய்தி நிறுவனத்திடம் விசாரணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.