ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை - கொல்கத்தாவில் பயங்கரம் !
கொல்கத்தா: கொல்கத்தாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவின் பாம் அவென்யூ குடியிருப்பில் வசித்து வந்தவர் நீல் ஃபொன்சேக்கா. இவரது மனைவி ஜெசிக்கா ஃபொன்சேக்கா. இவர்களுக்கு இரண்டு மகன்கள். இந்த நிலையில், தம்பதியினருக்குள் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கணவர் கத்தியால் மனைவி, குழந்தைகளை கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இதனை உறுதி செய்துள்ள கொல்கத்தா கூடுதல் காவல் ஆணையர் தேபாஷிஷ் போரால், இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ள ஜெசிக்காவின் கணவர் நீல் ஃபொன்சேக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள கொல்கத்தா போலீசார், குடும்ப தகராறு காரணமாக இக்கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.