அமைச்சர் பயணம் செய்த விமானம் லேட்.. டென்ஷனாகி 3 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்த ஏர் இந்தியா!
மத்திய அமைச்சர் பயணம் செய்த விமானம் தாமதம் ஆனதால், ஏர் இந்தியா நிறுவனம் மூன்று ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது .
புதுடெல்லி : மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ பயணம் செய்த விமானம் கிளம்ப தாமதம் ஆனதால் மூன்று ஏர் இந்தியா ஊழியர்களை அந்நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று காலை டெல்லியில் இருந்து விஜயவாடாவிற்கு கிளம்ப தயாராக இருந்தது. இந்த விமானத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ உட்பட 125 பயணிகள் வழக்கமான சோதனைகள் முடித்து விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், விமானம் கிளம்ப வேண்டிய நேரத்தைக் கடந்தும் கிளம்பாமல் இருந்ததால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
விமானி வராததால், விமானம் இயக்க தாமதம் ஆகும் என்று ஊழியர்கள் கூறியதால் சில பயணிகள் எரிச்சல் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, சிலர் விமானத்தில் இருந்த மத்திய அமைச்சரிடம் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ தனது செல்போன் மூலம் ஏர் இந்தியா தலைமை அதிகாரி பிரதீப் கரோலாவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டார்.
அதன்பின்னர் விமானம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக கிளம்பி விஜயவாடா சென்றது. இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க பிரதீப் கரோலா உத்தரவிட்டதன் பேரில், மூன்று ஏர் இந்தியா ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
மேலும், வானிலை சரியில்லாத காரணத்தால் விமானம் தாமதமாக கிளம்பும் என்கிற அறிவிப்பை பயணிகளிடம் முறையாக தெரிவிக்காத ஊழியர்களாலே இந்த பிரச்னை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே, ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது இது போன்று பல புகார்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.