பிள்ளைவரம் கேட்டுப் போன பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி – மந்திரவாதி கைது
டெல்லி: டெல்லியில் பெண் ஒருவரை, மந்திரவாதி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள பஜன்புரா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் திருமணமாகி ஏழாண்டுகள் ஆனவர்.
ஆனால், இத்தனை வருடங்கள் கழிந்தும் குழந்தை பாக்கியம் இல்லாததால் மனமுடைந்துப் போனார்.
மந்திரவாதியிடம் குமுறல்:
தனது மன உளைச்சலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வெளியாகியிருந்த ஒரு விளம்பரத்தை கண்டு மகிழ்ச்சியடைந்த அந்தப் பெண் டெல்லியின் மோகன் நகர் பகுதியில் உள்ள மாந்தரீக நிலையத்திற்கு சென்று அங்குள்ள மந்திரவாதியிடம் தனது மனக்குறையை கூறினார்.
பணம் பிடுங்கிய மந்திரவாதி:
இதையடுத்து அவருக்கு ஆலோசனைகளைச் சொன்னார் மந்திரவாதி. இதேபோல இரண்டு "கன்சல்டேஷன்களை" வைத்த அவர், ஆயிரக்கணக்கான ரூபாயை அவரிடம் கறந்துக் கொண்டார்.
அமானுஷ்ய சக்தி மூலம்:
மேலும், அந்த மந்திரவாதி, அமானுஷ்ய சக்தியை வரவழைத்து, அதன் மூலம் குழந்தை வரத்துக்கு ஏற்பாடு செய்வதாக கூறி, அதற்கான நல்ல "நாளை" குறித்துத் தந்து அனுப்பினார்.
பாலியல் பலாத்கார முயற்சி:
அந்த "சுபமுகூர்த்த சுபதினமான" நேற்று முன்தினம் அந்த மாந்தரீக நிலையத்துக்கு சென்றபோது, அந்தப் பெண்ணை மயக்கிய தலைமை மந்திரவாதி, தனது சிஷ்ய மந்திரவாதிகள் இருவருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
போலீஸ் கைது:
அவர்களது பிடியில் இருந்து விடுபட்டு ஓடிவந்த பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரையடுத்து அமானுஷ்ய சக்தியுடன் இருப்பதாக கூறி வந்த 3 மந்திரவாதிகளையும் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேண்டாம் தவறான பாதை:
இதுபோன்ற தவறான பாதைகளில் சென்றால் நமக்கு இப்படிப்பட்ட கொடுமைகள்தான் நடக்கும் என்ற வகையில் இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.