சீக்கியர்ளுக்கு எதிரான 1984ம் ஆண்டு கலவர வழக்கு விசாரணை – 3 பேர் சிறப்புக் குழு அமைப்பு
டெல்லி: சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற 1984ம் ஆண்டு கலவரம் தொடர்பான விசாரணைக்கு 3 பேர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
மூத்த காவல் துறை அதிகாரி பிரமோத் அஸ்தானா தலைமையிலான இக்குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி ராகேஷ் கபூர், டெல்லி காவல் துறை கூடுதல் துணை ஆணையர் குமார் கியானேஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
6 மாதங்களில் இக்குழு மத்திய அரசிடம் தனது அறிக்கையைத் தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1984ம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த அவரது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக பெரும் கலவரம் மூண்டது.
டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் நடந்த கலவரங்களில் 3 ஆயிரத்து 325 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக நீதிபதி மாத்தூர் குழு அளித்த பரிந்துரைகளின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.