பஞ்சாப்பில் பாக். சிம் கார்டுகள், பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் கைது
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நீடிக்கும் நிலையில் அம்மாநிலத்தில் பாகிஸ்தான் சிம் கார்டுகள், வெளிநாட்டு ஆயுதங்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாப்பில் பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தொடர்ந்து தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தேடுதல் நடவடிக்கையின் போது சண்டிகர் அருகே 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று சிக்கியது.
அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் பாகிஸ்தான் சிம்கார்டுகள், சீனா, பாகிஸ்தான் மற்றும் பிரேசில் நாட்டு துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களில் குர்ஜந்த்சிங், சந்தீப் சிங் ஆகிய 2 பேரும் பாகிஸ்தான் எல்லையோர மாவட்டமான தாரன் தாரனைச் சேர்ந்தவர்கள்; மற்றொரு நபரான ஜதீந்தர்சிங் லூதியானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இவர்கள் வழிப்பறி, ஆட்கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இருப்பினும் அவர்களுக்கும் தீவிரவாத கும்பல்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.