துணை ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் வெங்கையா நாயுடு, வித்யாசாகர் ராவ், ஈ.எஸ்.எல். நரசிம்மன்!
துணை ஜனாதிபதி பதவிக்கான பாஜக வேட்பாளர் பட்டியலில் வெங்கையா நாயுடு, வித்யாசகர் ராவ், நரசிம்மன் ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கபடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர்கள் பட்டியலில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ஆளுநர்கள் வித்யாசாகர் ராவ், ஈ.எஸ்.எல். நரசிம்மன் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 5-ந் தேதி நடைபெற உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்தை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
இதனால் துணை ஜனாதிபதி பதவிக்கு தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவரை நிறுத்துவது குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி பரிசீலித்து வருகிறது. தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மாநிலங்களில் ஒருவரை தேர்வு செய்யலாம் என பாஜக கருதுகிறது.
வெங்கையா நாயுடு
ஆந்திராவைச் சேர்ந்த வெங்கையா நாயுடு 4-வது முறையாக ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கிறார். கர்நாடகாவில் இருந்து 3 முறையும் தற்போது ராஜஸ்தானில் இருந்தும் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு 2002, 2004 காலத்தில் அக்கட்சியின் தலைவராகவும் இருந்தார்.
பரிசீலனை
வெங்கையா நாயுடுவின் ராஜ்யசபா பதவி காலம் 2022-ல் முடிவடைகிறது. அதன்பின்னர் தீவிர அரசியலில் இருந்து அவர் விலக திட்டமிட்டுள்ளார். ஆனால் பிரதமர் மோடியோ வெங்கையா நாயுடுவை எவ்வளவு எளிதாக விட்டுவிட விரும்பவில்லையாம். துணை ஜனாதிபதிதான் ராஜ்யசபா தலைவராகவும் இருப்பார். ராஜ்யசபாவில் நீண்ட அனுபவம் கொண்டவர் என்பதால் துணை ஜனாதிபதி பதவிக்கு அவரை வேட்பாளராக்க பாஜக விரும்புகிறது.
நரசிம்மன்
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் ஆளுநராக உள்ள ஈ.எல்.நரசிம்மன் பெயரையும் பாஜக பரிசீலித்து வருகிறது. தமிழகத்தில் 1945-ம் ஆண்டு பிறந்தவர் நரசிம்மன். ஹைதராபாத்தில் 2 ஆண்டுகள் படித்திருந்தாலும் பின்னர் பயின்றது அனைத்தும் சென்னையில்தான். சென்னை பிரசிடென்சி கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்றவர் நரசிம்மன். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தவர்.
ஐபி இயக்குநர்
1968ஆம் ஆண்டு ஆந்திரா ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியாக அரசுப் பணியை தொடங்கினார் நரசிம்மன். 1981- 84ஆம் ஆண்டு மாஸ்கோவில் இந்திய தூதரகத்தின் முதல் செயலராக நியமிக்கப்பட்டார். பின்னர் உளவுத்துறையில் (ஐபி) நீண்டகாலம் பணியாற்றிய நரசிம்மன் 2006-ல் ஐபி இயக்குநராக ஓய்வு பெற்றார்.
காங். ஆட்சிக்கால ஆளுநர்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சத்தீஸ்கர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் ஆந்திராவின் ஆளுநரானார். அப்போதுதான் ஆந்திரா மாநில பிரிப்பு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது ஆந்திரா, தெலுங்கானாவின் ஆளுநராக இருந்து வருகிறார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஆளுநராக்கப்பட்டவர் நரசிம்மன் என்பதால் இவரை வேட்பாளராக அறிவித்தால் காங்கிரஸ் அண்யும் ஆதரவு தெரிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கிறது பாஜக.
வித்யாசாகர் ராவ்
அதேபோல் மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக உள்ள வித்யாசாகர் ராவ் பெயரும் பரிசீலிக்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்.-ன் தீவிர உறுப்பினர் என்பதால் வித்யாசகர் ராவ் பெயரையும் பாஜக பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. இதில் வெங்கையா நாயுடுவுக்கே அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.