பாலியல் புகார்: டெஹல்கா ஊழியர்கள் கோர்ட்டில் வாக்குமூலம்
பனாஜி: தருண் தேஜ்பால் மீதான பலாத்கார வழக்கில் டெஹல்கா பத்திரிகையாளர்கள் கோவா நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
டெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் தமது பத்திரிகையில் பணியாற்றும் ஒரு பெண் பத்திரிகையாளரை பலாத்காரம் செய்ததாக கடந்த சனிக்கிழமை கோவா போலீசாரால் கைது செய்யப்பட்டார் .அவரை போலீசார் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக தேஜ்பாலின் மகளிடம் கோவா குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். தற்போது பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளருடன் வேலை செய்த மூன்று பத்திரிகையாளர்கள் கோவா நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது வாக்குமூலத்தை அளித்தனர்.
அவர்கள் அனைவரும் நேற்று காலை 11 மணிக்கு கோவா நீதிமன்றம் சென்றனர். அவர்கள் மூன்று பேரும் தனி தனியாக ஆஜராகி தங்களது வாக்குமூலத்தை அளித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக டெஹல்காவின் நிர்வாக ஆசிரியர் சோமா சவுத்திரியிடம் இன்று வாக்குமூலம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.