டாக்சியிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லீம் பெண்... பிள்ளையார் கோவிலில் பிரசவித்தார்!
மும்பை: மும்பையில் டாக்சி டிரைவரின் முரட்டுத்தனத்தால் நிறைமாத கர்ப்பிணி டாக்சியிலிருந்து கீழே இறக்கி விடப்பட்டார். பிரசவ வலியால் துடித்த அவர் அருகில் உள்ள சாலையோர விநாயகர் கோவிலில் தஞ்சமடைந்து அங்கு அக்கம் பக்கத்தினரின் உதவியால் அழகான ஆண் குழந்தையைப் பிரசவித்தார். தனக்கு அடைக்கலம் தந்த விநாயகர் கோவிலில் குழந்தை பிறந்ததால் கணேஷ் என தனது குழந்தைக்குப் பெயரிட்டுள்ளார் அந்த முஸ்லீ்ம் தாய்.
மும்பையைச் சேர்ந்தவர் 24 வயதான நூர் ஜஹான். இவரது கணவர் பெயர் இலியாஸ் ஷேக். நூர் ஜஹான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து டாக்சி ஒன்றில் அவரை கணவர் இலியாஸ் ஷேக் சியான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் வழியிலேயே திடீரென அந்த டாக்சி டிரைவர் இருவரையும் கட்டாயப்படுத்தி கீழே இறக்கி விட்டு விட்டுப் போய் விட்டார்.
என்ன செய்வது என்று தெரியாமல் நடு ரோட்டல் தவித்துப் போன நூர்ஜஹானும், இலியாஸும், சாலையோரமாக உள்ள விநாயகர் கோவிலில் தஞ்சமடைந்தனர். கோவிலுக்கு வந்திருந்த பெண் பக்தர்கள் நூர்ஜஹான் நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஒன்று கூடி ஆண்களை வெளியே அனுப்பி விட்டு நூர் ஜஹானுக்குப் பிரசவம் பார்த்தனர். பக்கத்தில் உள்ள வீடுகளுக்குப் போய் சேலை, போர்வை உள்ளிட்டவற்றை வாங்கி வந்து கோவிலுக்குள்ளேயே தடுப்பை ஏற்படுத்தி அதை "லேபர் வார்டாக" மாற்றி பிரசவம் பார்த்தனர். கோவில் வளாகத்திலேயே சிறிது நேரத்தில் நூர் ஜஹானுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்ததும் நூர் ஜஹானே தொப்புள் கொடியையயும் துண்டித்து எடுத்தார். அதன் பின்னர் பிரசவம் பார்த்த பெண் பக்தர்கள் இலியாஸை அழைத்து ஆண் குழந்தை பிறந்தசெய்தியை தெரிவித்தனர். தனது மனைவியையும், அவர் பெற்றெடுத்த குழந்தையையும் அவர்கள் நலமாக இருப்பதையும் பார்த்து நெகிழ்ந்து போனார் இலியாஸ்.
இதுகுறித்து இலியாஸ் கூறுகையில், நான் மிகவும் கவலை அடைந்து விட்டேன். எனது மனைவி பிரசவிக்கும் நிலையை நெருங்கி விட்ட சமயத்தில் டாக்சி டிரைவர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். அவரது டாக்சியில் குழந்தை பிறந்து விடக் கூடாது என்று கவனமாக இருந்தார். இதனால் வழியிலேயே இறக்கி விட்டு விட்டார்.
அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த விநாயகர் கோவிலை பார்த்து அங்கு போனோம். அங்கிருந்த பெண்கள் கோவிலில் வழிபட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் உதவிக்கு ஓடி வந்தனர். நாங்கள் அவர்களிடம் உதவி கூட கேட்கவில்லை. அவர்களாகவே வந்து எனது மனைவிக்கு பிரசவம் பார்த்தனர் என்றார்.
நூர்ஜஹான் கூறுகையில், எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்போது கோவிலைப் பார்த்த நான் கடவுள் நமக்காக உதவிக்கு வருவார் என்ற நம்பிக்கை வந்தது. கடவுள் முன்பு எனக்குக் குழந்தை பிறந்துள்ளது. இதை விடச் சிறந்தது வேறு இல்லை என்று நான் கருதுகிறேன் என்றார் நெகிழ்ச்சியுடன்.
தங்களது குழந்தை விநாயகர் கோவிலில் பிறந்ததால் கணேஷ் என்று பெயரிடப் போவதாக இலியாஸும், நூர்ஜஹானும் கூறினர்.