தெலுங்கானாவில் இன்றும் இடியுடன் கனமழை பெய்யும்.... வானிலை மையம் எச்சரிக்கை!
தெலுங்கானா மாநிலத்தில் இன்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐதராபாத் : தலைநகர் ஐதராபாத் உள்ளிட்ட தெலுங்கானா மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ஐதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை முதல் 5 மணி நேரம் தொடர்ந்து வெளுத்து வாங்கிய மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. தலைநகர் ஐதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் வணிக வளாகங்கள், அலுவலகங்களிலும் தண்ணீர் சூழ்ந்து கொண்டது.
பெருக்கெடுத்து ஓடிய மழை நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு கடந்த திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மும்பையில் ஒரே நாளில் பெய்த கனமழையைவிட மோசமான பேய்மழை இது என்று சொல்லப்பட்டது.
புதிய புயல்
இந்நிலையில் தெலுங்கானாவில் இன்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 7 முதல் மழையின் அளவு படிப்படியாக அதிக மழையில் இருந்து மிக கனமழையாக மாற வாய்ப்புள்ளதாகவும் உள்ளூர் வானிலை மையத்தினர் கூறியுள்ளனர். ஒடிசா கடற்கரையை யொட்டி உருவாகியுள்ள புதிய புயல் சின்னமே இதற்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
பரவலாக கனமழை
அந்தப் புயலானது மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் தெலுங்கானாவிற்கு அதிக பாதிப்பு இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத், மெக்பூப் நகர், வாரங்கல், ரங்காரெட்டி, நலகொண்டா, மேடக் உள்ளிட்ட இடங்களில் கடந்த 3 நாட்களில் சராசரிக்கு அதிகமான மழை பெய்துள்ளது. இரவு நேரங்களில் வெப்பநிலை 20 - 21 டிகிரி செல்சியசாக உள்ளது.
தெலுங்கானாவில் நல்ல மழை
தென்மேற்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியோடு முடிகிறது. எனினும் வடகிழக்கு பருவமழை காரணமாக ஆந்திராவின் தெற்கு கடலோரப் பகுதிகள் மற்றும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தெலுங்கானாவில் கனமழைக்கு வாய்ப்பு
தெலுங்கானாவில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், ஐதராபாத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தெலங்கானாவில் தென்மேற்குப் பருவமழை நல்ல மழையைத் தந்துள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.