வெயிட்டிங், தட்கலுக்கு விடை கொடுக்கிறது ரயில்வே...அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்
வரும் 2020ம் ஆண்டு முதல் வெயிட்டிங் லிஸ்ட், தட்கல் தொல்லைகள் ஏதுமின்றி முன்பதிவு செய்ததுமே கன்பார்ம் டிக்கெட் கிடைக்கும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
டெல்லி: முன்பதிவு செய்தவுடனே வெயிட்டிங் லிஸ்ட் இல்லாமல் கன்பார்ம் டிக்கெட் ஒதுக்கப்படும் நடைமுறை 2020ம் ஆண்டில் சாத்தியமாகும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடந்த கருத்தரங்கு ஒன்றில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், "கடந்த 10 ஆண்டுகளில் ரயில் சேவை, இந்தியாவில் அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் பயணிகள் போக்குவரத்துக்கான தேவை கூடுதலாகியுள்ளது. ஆனால் புதிய ரயில் பாதைகள் அமைப்பது என்பது குறைந்த அளவில்தான் சாத்தியமாகியுள்ளது. ரயில்வேயின் திறனை உயர்த்துவதற்கு, கூடுதல் ரயில் பாதைகள் அமைப்பதே தீர்வாக இருக்கமுடியும் என்பதை அரசு உணர்ந்தே இருக்கிறது.
இதற்காக 8.5 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளோம். 2019ம் ஆண்டுக்குள் சரக்கு ரயில் போக்குவரத்துக்கு என தனி ரயில் பாதை அமைக்கப்படும். அதேபோல வெயிட்டிங்க், தட்கல் முறைகள் இல்லாமல் ரயில்களில் பயணிக்க கேட்டவுடன் கன்பார்ம் டிக்கெட் கிடைக்கும் சூழ்நிலை வரும். இது 2020 ம் ஆண்டு முதல் சாத்தியமாகும் என்றார்.