முதலில் மல்லையாவ பிடிங்க: ரயிலில் வித்அவுட்டில் பயணித்து ஃபைன் கட்ட மறுத்த மும்பை பிரேமலதா
மும்பை: மும்பையில் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த பெண்ணிடம் அபராதம் செலுத்துமாறு கூறியதற்கு முதலில் மல்லையாவிடம் இருந்து பணத்தை திரும்பப் பெற்று அவரை கைது செய்யுமாறு தெரிவித்துள்ளார்.
தெற்கு மும்பையில் பணக்காரர்கள் வாழும் புலேஷ்வர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேமலதா பன்சாலி(44). இரண்டு குழந்தைகளின் தாயான அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்துள்ளார்.
மகாலட்சுமி ரயில் நிலையத்தில் வந்திறங்கிய அவரிடம் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட்டை கேட்டுள்ளார். அதற்கு பிரேமலதா தான் டிக்கெட் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதை கேட்ட பரிசோதகர் டிக்கெட் எடுக்கவில்லை என்றால் ரூ.260 அபராதம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
அதற்கு பிரேமலதா, ரூ.9 ஆயிரம் கோடி பணத்தை ஏமாற்றிய விஜய் மல்லையாவிடம் இருந்து பணத்தை வாங்கிவிட்டு முதலில் அவரை கைது செய்யுங்கள் என்று விவாதம் செய்துள்ளார்.
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரேமலதா அபராத தொகையை செலுத்துவதற்கு பதில் 7 நாட்கள் சிறையில் இருக்க முடிவு செய்தார். முன்னதாக ரயில் நிலையத்தில் அவரை அபராதம் செலுத்திவிட்டு வீட்டிற்கு செல்லுமாறு பெண் போலீசார் அவரிடம் எவ்வளவோ பேசியும் கேட்கவில்லை.
அபராத தொகையை செலுத்த மாட்டேன் என்று கூறி பிரேமலதா 12 மணிநேரம் விவாதம் செய்துள்ளார்.