பாஜக தலைவர்களின் வீடுகளில் பசுக்களைக் கட்டுங்க, அவங்களே வளர்க்கட்டும்.. லாலு அலேக்!
பாஜக தலைவர்களின் வீடுதோறும் வயதான பசு மாடுகளைக் கட்டுமாறு தனது கட்சியினருக்கு, லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார்.
ராஜ்கிர்: மாட்டிறைச்சிக்கு எதிராகப் பேசிவரும் பாஜக தலைவர்களின் வீடுகளில் வயதான பசு மாடுகளைக் கட்டி வைக்கும்படி, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தொண்டர்களுக்கு, அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் பசு வதைக்கு எதிராக, பாஜக.,வினர் பெரும் பிரச்சினை செய்து வருகின்றனர். பசுக் காப்பாளர்கள் என்ற பெயரில் நடைபெறும் வன்முறைத் தாக்குதலில் சிக்கி சிலர் உயிரிழந்துள்ளனர். மாட்டிறைச்சி விற்பனையில் ஈடுபடுவோரை அடித்துக் கொன்றும் உள்ளனர்.
அத்துடன், மாடுகளை புனிதமாகக் கருதும்படி, நாள்தோறும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ தலைவர்கள் பலரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை ஆங்காங்கே பேசி வருகின்றனர்.
லாலு பிரசாத் அதிரடி
இந்நிலையில், இவர்களுக்குப் பதிலடி தரும் வகையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளார். அவர் நேற்று நடைபெற்ற கட்சி செயற்குழு கூட்டத்தில் பேசுகையில், வயதான மாடுகளை இறைச்சிக்கூடத்திற்கு அனுப்பாமல் பாஜக தலைவர்களின் வீடுகளில் கட்டி வைக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.
பாலு தராது... கோமியம்தான் தரும்
வயதான மாடு பால் தராது. கோமியம் வேண்டுமானால் தரும். அதனை வைத்துக் கொண்டு, பாஜக தலைவர்கள் எப்படி பராமரிக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
வளர்த்துப் பாருங்க
மாட்டிறைச்சி கூடாது; பசுவதை கூடாது என்று பேசிவரும் பாஜக தலைவர்கள், அனைவரும் வீட்டிலும் வயதான மாடுகளைக் கட்டி, பாடம் புகட்ட வேண்டும். அந்த மாடுகளை வைத்துக்கொண்டு, எப்படி பாதுகாக்கிறார்கள் என்பதை பார்க்க ஆர்வமாக உள்ளேன்' என்று லாலு பிரசாத் பேசியுள்ளார்.
பரபரப்பு
லாலு அழைப்பை ஏற்று ராஷ்டிரிய ஜனதாதள தொண்டர்கள் பசுக்களுடன் பாஜக தலைவர்களின் வீடுகளுக்குப் படையெடுத்தால் நிச்சயம் மோதல் வெடிக்கும் என்பதால் பீகாரில் இது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. பாஜகவுக்கு எதிரான அரசியல் நகர்வுகளை, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தீவிரமாக முன்னெடுக்கத் தொடங்கியுள்ளதாக, அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.