திருமலை பிரம்மோற்சவம்: நாளை 5ம் நாள் கருடசேவை
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் நடந்து வரும் பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை நாளை இரவு நடக்கிறது.
லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சீமாந்திரா பந்த், போராட்டத்தையும் மீறி ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர். ஏழுமலையானையும், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசுவாமியின் மாடவீதி உலாவும் பக்தர்கள் பரவசத்துடன் கண்டு தரிசித்து வருகின்றனர்.
10 நாள் திருவிழா
இந்தியாவின் பணக்கார தெய்வமாக போற்றப்படும் திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 5ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் நடைபெறும் விழாவில் தினசரி மலையப்பசுவாமி மாடவீதிகளை வலம் வருவார். முதல்நாளன்று பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலையப்ப சுவாமி பவனி வந்தார்.
அன்னவாகனத்தில் உலா
இரண்டாம் நாள் காலை சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அன்ன வாகனத்திலும், 3வது நாளான நேற்று காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும் மாடவீதிகளில் சுவாமி வலம் வந்தார்.
பக்தர்கள் வேடம்
மலையப்பசுவாமி வலம் வரும் போது ஏராளமான பக்தர்கள் வேடமணிந்து நடனமாடி வந்தனர். கோலாட்டம், கும்மி என ஆடிப்பாடி தங்களின் பக்தியை வெளிப்படுத்தினர்.
கோவிந்தா முழக்கம்
நான்காம் நாளான இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் பவனி வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்த முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்றிரவு சர்வ பூபால வாகனத்தில் சுவாமி வலம் வருகிறார்.
நாளை கருடசேவை
5ம்நாளான புதன் காலை மோகினி அவதாரத்தில் சுவாமி உலா வருகிறார். பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை உற்சவம் நாளை இரவு நடைபெற உள்ளது. மகாவிஷ்ணுவின் வாகனம் கருடன். இதனால் ஆண்டுதோறும் கருடசேவை தினத்தன்று மலையப்ப சுவாமியை காண 5 லட்சம் பக்தர்கள் வரை திருமலைக்கு வருவார்கள்.
வாகனங்களுக்கு கட்டுப்பாடு
தற்போது சீமாந்திரா பந்த், போராட்டம் நடைபெறுவதால் அந்த அளவிற்கு பக்தர்கள் கூட்டம் இல்லாவிட்டாலும் அதிக அளவில் வருவார்கள் என்று எதிர்ப்பாக்கப்படுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருசக்கர வானகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அலிபிரி அருகே தனி பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.