தேர்தல் முடிவுகளால் வன்முறை அபாயம்... ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு!
Recommended Video
அமராவதி: தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது வன்முறை அபாயம் இருப்பதையடுத்து, ஆந்திராவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. சட்டசபைக்கு 175 தொகுதிகளுக்கும், லோக்சபாவுக்கு 25 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பபட்டது.இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கலவையான கணிப்புகளாக உள்ளன. எனினும், பல கருத்துக் கணிப்புகள் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக வந்துள்ளன. அவரது கட்சி 130 இடங்கள் வரை பிடிக்கும் என்று தெரிவிக்கின்றன.
இதனால், அங்கு தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்படும் சூழல் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் 36 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 350 வாக்குப்பதிவு மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் சட்டம் ஒழுங்கு பார்வையாளர் கேகே.சர்மா மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் கோபால கிருஷ்ண திவேதி ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
ஆந்திரா முழுவதும் 25,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் 35 கம்பெனி துணை ராணுவப்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், வன்முறை அபாயம் இருப்பதையடுத்து, கூடுதலாக 10 கம்பெனி துணை ராணுவப்படையினரை மத்திய அரசு அனுப்ப உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு ஆந்திரா முழுவதும் மதுக்கடைகள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டள்ளது. வன்முறை ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.