இனப்பெருக்கத்திற்கு விடப்பட்ட பெண் புலி பண்ட்டியைக் கடித்துக் கொன்ற ஆண்புலி குமார்!
பெங்களூர்: கர்நாடகாவில் இனப்பெருக்கத்திற்காக பெண் புலியுடன் விடப்பட்ட ஆண் புலி, அப்பெண் புலியைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூர் நகரின் அருகில் இருக்கும் வமஞ்சூர் பகுதியில் பிலிகுலா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது.
இந்த சரணாலயத்தில் இருக்கும் பண்ட்டி என்ற 5 வயதான பெண் புலியை இனப்பெருக்கத்துக்காக ஒரு கூண்டுக்குள் அடைத்த சரணாலய அதிகாரிகள், கடந்த திங்கட்கிழமை காலை அதே கூண்டுக்குள் குமார் என்ற 7 வயதான ஆண் புலியையும் உலவ விட்டனர்.
ஆனால், காதலுடன் அணுகுவதற்குப் பதில், பண்ட்டியை கண்ட குமார் ஆவேசமாக அதன்மீது எகிறிப்பாய்ந்தது. பயந்து ஒதுங்கிச் சென்ற பண்ட்டியை கைகளால் அடித்தும், பிடித்து இழுத்துக் கடித்தும் குமார் கோபத்துடன் தாக்கியது. இதில் படுகாயமடைந்து கீழே விழுந்து கிடந்த பண்ட்டியை கூண்டில் இருந்து வெளியே தூக்கிய கால்நடை மருத்துவர்கள் அவசர சிகிச்சை அளித்தனர்.
எனினும், கழுத்தில் கடிபட்ட காயத்தில் இருந்து ஏராளமான ரத்தம் வெளியேறியதால் சிகிச்சை பலனின்றி பண்ட்டி நேற்று உயிரிழந்தது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.