'மோடியின் வாரணாசி பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்க காரணம் குஜராத் போலீஸ்தான்'
டெல்லி: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் வாரணாசி பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்க காரணமே குஜராத் மாநில போலீசாரின் எச்சரிக்கைதான் என்று மத்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நரேந்திர மோடியின் வாரணாசியின் பெனியா பாக் பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் நிர்வாகம் அனுமதி மறுத்தது. மத்திய உளவுப் பிரிவின் எச்சரிக்கையை சுட்டிக்காட்டியே இந்த அனுமதி மறுக்கப்பட்டதாக தேர்தல் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
ஆனால் மத்திய உளவுப் பிரிவினரோ, மோடி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று குஜராத் மாநில போலீசார் தான் உளவுப் பிரிவுக்கு தகவல் அனுப்பியிருந்தனர். அந்த தகவலைத்தான் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு உளவுத்துறை அனுப்பியும் வைத்தது. மோடி மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக உளவுத்துறைக்கு தனியே எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறது.
அதே நேரத்தில் கடந்த 8 ஆண்டுகளாக தீவிரவாதிகளின் இலக்காக வாரணாசி இருந்து வருகிறது என்பதையும் மறுக்க முடியாது என்கின்றனர் உளவுத்துறை அதிகாரிகள்.