திப்பு சுல்தானை விமர்சித்த பாஜக எம்.பிக்கு கொலை மிரட்டல்! நாளை கர்நாடக பந்த்
பெங்களூர்: "திப்பு சுல்தான் பற்றி தவறாக பேசினால், விஹெச்பி தலைவரை போல கொல்லப்படுவாய்" என வந்த பேஸ்புக் மிரட்டலால் மைசூர் தொகுதி பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவுக்கு போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
மைசூர் மாகாணத்தை ஆண்டு வந்த திப்புசுல்தான் சுதந்திர போராட்ட தியாகி கிடையாது, தேச துரோகி என்று கர்நாடக பாஜக தலைவர்கள் கூறிவருகின்றனர். மைசூர் பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவும் இதே கருத்தை விழா ஒன்றில் பேசியிருந்தார்.
இந்நிலையில், பேஸ்புக்கில் தொடங்கப்பட்ட 'மைசூர் ஹுலி சாஹிதே மிலாத் மஹான் திப்பு சுல்தான்' என்ற ஒரு பக்கத்தில், பிரதாப் சிம்ஹாவுக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் குடகு மாவட்டம் மடிகேரியில், திப்பு பிறந்த நாள் விழாவை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது உயிரிழந்த விஹெச்பி தலைவர் குட்டப்பாவின் சடலம் படத்தையும், பிரதாப் சிம்ஹா படத்தையும் அருகருகே வைத்து, "திப்பு பற்றி தப்பாக பேசினால், குட்டப்பாவுக்கு நேர்ந்த கதிதான் உனக்கும் ஏற்படும். குட்டப்பா கால் தவறி விழுந்ததாக மாநில அரசு தப்பாக கூறுகிறது. அவரை கொலை செய்ததுபோல, உனது உயிருக்கும் ஆபத்து ஏற்படும்" என்று கன்னடத்தில், கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறிந்த பிரதாப் சிம்ஹா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க மாநகர கமிஷனர் உத்தரவிட்டார். ஏற்கனவே திப்பு சுல்தான் பெயரை பெங்களூர் ஏர்போர்ட்டுக்கு சூட்டியிருக்க வேண்டும் என்று கூறியதற்காக, எழுத்தாளர் கிரீஷ் கர்னாடுக்கு கொலைமிரட்டல் வந்ததும், அவர் தனது கருத்தை வாபஸ் பெற்றதும் நினைவிருக்கலாம்.
கர்நாடகாவில் திப்பு சுல்தான் பெயரால் அரசியல் கன ஜோராக நடக்க தொடங்கியுள்ளதற்கு இவையெல்லாம் சில உதாரணங்கள். இதனிடையே, மடிகேரி உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து, நாளை கர்நாடகா முழுமைக்கும் பந்த் நடத்த விஹெச்பி அழைப்பு விடுத்துள்ளது.