திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம்: நாளை கொடியேற்றம்; செப்.20 கருடசேவை
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை புதன்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய அம்சமான கருடவாகன சேவை 20ம் தேதி நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி, திருமலைக்கு வருகைதருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புரட்டாசி திருவோணம், வெங்கடாஜலபதியின் பிறந்த நாளாக கருதப்பட்டு வருகிறது. இதற்கு முன்பாக திருப்பதி கோவிலில் 9 நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய திருவிழா வருடாந்திர பிரம்மோற்சவ விழாவாகும். திருமலையில் ஏழுமலையானுக்கு பிரம்மன் தானே முன்னின்று இவ்விழாவை நடத்தி வைத்தார். இதனால் இந்த உற்சவம் ‘பிரம்மோற்சவம்' என்று அழைக்கப்பட்டது.
கொடியேற்றம்
ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறும். மேலும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை (புதன்கிழமை) மாலை 5 மணியில் இருந்து 5.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முதல்வர் சந்திரபாவு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் அளித்து விழாவை தொடக்கி வைக்கிறார்.
வாகனங்களில் மலையப்ப உலா
புதன்கிழமை இரவு பெரிய சேஷ வாகன வீதி உலா, 17ம்தேதி காலை சின்னசேஷ வாகன வீதி உலா, இரவு அம்ச வாகன வீதி உலா நடக்கிறது. 18ம்தேதி காலை சிம்ம வாகன வீதி உலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதி உலா நடக்கிறது.
கருடவாகன சேவை
19ம்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதி உலா, இரவு சர்வ பூபால வாகன வீதி உலா, 20ம் தேதி காலை மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதி உலா, இரவு கருடசேவை நடக்கிறது. அன்றைய தினம் 5 லட்சம் பக்தர்கள்வரை திருப்பதிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்க தேரோட்டம்
21ம் தேதி காலை அனுமந்த வாகன வீதி உலா, மாலை 5 மணியில் இருந்து மாலை 6 மணி வரை தங்கத் தேரோட்டம், இரவு யானை வாகன வீதி உலா, 22ம் தேதி காலை சூரிய பிரபை வாகன வீதி உலா, இரவு சந்திர பிரபை வாகன வீதி உலா நடக்கிறது. 23ம்தேதி காலை மரத் தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதி உலா, 24ம் தேதி காலை கோவில் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
மின்விளக்கு அலங்காரங்கள்
பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்தை யொட்டி நாளை திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் எனவே பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. கோவில் மின்விளக்குகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது. பக்தர்களின் பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்படுகிறார்கள்.
புதிய பேருந்துகள்
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆந்திர அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 482 பேருந்துகள் இயக்கப் பட உள்ளன. இதில் 60 புதிய பேருந்து சேவைகளை திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போக்கு வரத்து கழக செயல் இயக்குநர் ரவீந்திரபாபு, திருப்பதி வட்டார மேலாளர் நாகசிவுடு மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பலத்த சோதனை
திருப்பதி மலை அடிவாரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படுகிறது. மலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுப்பப்படுகிறது. பயணிகளின் உடமைகளும், வாகனங்களும் தீவிர பரிசோதனை செய்யப்படுவதோடு மதுபாட்டில்கள், சிகரெட்,பீடி போன்றவைகளை கொண்டு செல்லவும் அனுமதி மறுக்கப்படுகிறது.
3 அடுக்கு பாதுகாப்பு
இந்தாண்டு பிரம்மோற்சவத்தில் கோயில் மட்டுமின்றி கோயிலுக்கு வெளி பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட உள்ளது. அதேபோல் நான்கு மாட வீதிகளின் நுழைவு வாயில்கள் மற்றும் கோயிலின் நுழைவு வாயிலிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 அடுக்கு பாதுகாப்பு சோதனைக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
முன்பதிவு ரத்து
பிரம்மோற்சவ விழா நடைபெறும் நாட்களில், திருமலையில் உள்ள தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கும் விடுதிகள் அனைத்திலும் முன்பதிவு ரத்து செய்யப்படும். ‘முதலில் வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும். அதேபோன்று, பிரம்மோற்சவ விழா நாட்களில், முக்கிய பிரமுகர் (வி.ஐ.பி.) சிபாரிசு கடிதங்களும் ஏற்கப்பட மாட்டாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஆர்ஜித சேவைகள் ரத்து
பிரம்மோற்சவ விழாவையொட்டி, திருமலையில் தினந்தோறும் நடைபெறும் தோமால சேவை, அர்ச்சனை சேவை, கல்யாண உற்சவம், வசந்த உற்சவம், பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப அலங்கரன சேவை ஆகிய ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.