தெலுங்கான பந்த்: திருமலை பிரம்மோற்சவத்திற்கு பக்தர்கள் வருவதில் சிக்கல்
திருப்பதி: ஆந்திரா பிரிவினைக்கு எதிர்ப்பு சீமாந்திராவின் 13 மாவட்டங்களில், போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு, பக்தர்கள் வருவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து, தெலுங்கானாவைப் பிரிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், சீமாந்திர பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
தனித் தெலுங்கானாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த தகவல் வந்ததும், பெட்ரோல் 'பங்க்'கள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், பள்ளி, கல்லூரிகள், தனியார் அலுவலகங்கள் என, அனைத்தும், நேற்று காலை முதல் மூடப்பட்டன.
திருப்பதியில், 48 மணி நேர போராட்டம், சித்தூர் மாவட்டத்தில், 72 மணி நேர போராட்டம் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக, திருப்பதிக்கு உள்ளே வரவோ, அங்கிருந்து வெளியே செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பதி நகருக்குள், இருசக்கர வாகனத்தை தவிர, வேறு எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை.
திருப்பதிக்கு வரும் அனைத்து வாகனங்களும், ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக எல்லைப் பகுதியான சித்தூரில், தமிழகத்தில் இருந்து வரும், வாகனங்கள் தடுக்கப்பட்டதால், பல கிலோ மீட்டர் தொலைவுக்கு, வாகனங்கள் நிற்கின்றன. பைபாஸ் சாலையில், மரங்களை வெட்டிப்போட்டும், கற்களை குவித்தும், டயர்களை எரித்தும், தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தடுக்கும் போலீசார் மீதும், போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.
பக்தர்களுக்கு அனுமதி:
இதனால், ஏழுமலையானை தரிசிக்க வந்த பக்தர்கள், பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்காக, நேற்று மாலை, 6:00 மணி முதல் இன்று காலை, 6:00 மணி வரை, அனைத்து வாகனப் போக்குவரத்துக்கும், போராட்டக்காரர்கள் அனுமதி அளித்தனர். மீண்டும் இன்று காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது என, போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இலவச உணவு, குடிநீர்
48 மணி நேர போராட்டத்தினால், ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பாதிக்காதவாறு, அவர்களுக்கு தேவையான வசதிகளை, முடிந்த அளவு, தேவஸ்தானம் சார்பில், செய்து தருவதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர். போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்தில் இருந்து, வயோதிகர்கள் மற்றும் குழந்தைகளை, அழைத்துக் கொண்டு வந்து சிரமப்பட வேண்டாம். வாடகை அறைகளில் தங்கியிருப்போர், கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. போராட்டம் முடியும் வரை தங்கிக் கொள்ளலாம். பக்தர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்றார்.
கூடுதல் பேருந்துகள் கிடைக்குமா?
திருப்பதியில், ஸ்ரீநிவாசம், விஷ்ணுவாசம், ரயில் நிலையம், திருப்பதி மற்றும் அலிபிரி பேருந்து நிலையங்களில், பக்தர்களுக்கு தேவையான வசதி செய்து தரப்படும். பிரம்மோற்சவ நாட்களில் பக்தர்களின் வசதிக்காக, 500 பேருந்துகளை கேட்டுள்ளோம். தற்போதுள்ள சூழ்நிலையில், தருவார்களா என்பது தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கிரண்குமார் வருவாரா?
பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்தின் போது ஆந்திரா மாநில முதல்வராக இருப்பவர் நேரடியாக கலந்து கொள்வது வழக்கம். தற்போதுள்ள சூழ்நிலையில், ஹைதராபாத்தில் இருந்து, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, திருமலைக்கு வருவது கேள்விக்குறியாகி உள்ளது. அப்படியே வந்தாலும், போராட்டக்காரர்கள் திருமலைக்கு செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என்பதால், அறநிலையத் துறையைச் சேர்ந்த, யாராவது ஒருவர், பட்டு வஸ்திரங்களை கொண்டு வரலாம், என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், ஆந்திர முதல்வராக இருந்த என்.டி.ராமாராவ், பிரம்மோற்சவத்தின் முதல் நாளன்று, ஏழுமலையானுக்கு, ஆந்திர அரசின் சார்பில், பட்டு வஸ்திரங்கள் வழங்க ஏற்பாடு செய்து, தானும் கலந்து கொண்டார். அன்றில் இருந்து இன்று வரை, இந்த சம்பிரதாயம் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சக்கணக்கான பக்தர்கள்
திருமலை ஏழுமலையான தரிசிக்க சாதாரண நாட்களிலேயே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். பிரம்மோற்சவ சமயத்தில் 5 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போராட்டம் காரணமாக இந்த ஆண்டு ஏழுமலையான தரிசிக்க பக்தர்கள் வருவது கேள்விக்குறியாகியுள்ளது.