”இனி போலியாக திருப்பதி லட்டு விற்க முடியாது”- புவிசார் குறியீடு வழங்கி நீதிமன்றம் உத்தரவு
திருப்பதி: திருப்பதி தேவஸ்தான லட்டு விற்பனைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி கோவிலி்ல் தயாரித்து பிரசாதமாக வழங்கப்படும் லட்டு விற்க புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இனி வேறு யாரும் திருப்பதி லட்டு என்ற பெயரை உபயோகபடுத்தி லட்டுகளை விற்பனை செய்ய முடியாது.
புவிசார் குறியீட்டுச் சட்டம்:
இந்தியாவில் புவிசார் குறியீட்டு சட்டம் 1999 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.புவிசார் குறியீடு என்பது " ஒரு புவியியல் சார்ந்து உற்பத்தி செய்யும் பொருளை மற்றவர்கள் உரிமை கொள்ளக் கூடாது.அதே பெயரை பயன்படுத்தக் கூடாது. அந்தப் பெயரைக் கொண்டு போலியாக பொருள்களை உற்பத்தி செய்யக் கூடாது" என்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.
காஞ்சி பட்டுடுத்தி:
உதாரணத்துக்கு காஞ்சிபுரம் பட்டு, மதுரை சுங்கடி சேலை உள்பட பல பொருள்களைக் குறிப்பிடலாம். இதில் பதிவு செய்த பொருள்கள் பெயரில் வேறு யாரும் உற்பத்தி செய்தால் சட்டப்படி அது தவறாகும்.
கைத்தறி பொருள்களின் உரிமம்:
இந்த புவிசார் குறியீடு சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு உறுதி வரை 193 பொருள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 128 பொருள்கள் கைத்தறி பொருள்கள் சார்ந்தவை. இந்தப் பொருள்கள் புவிசார் குறியீடின் கீழ் பதிவு மட்டுமே செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்தப் பொருள்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.ஆனால், வெளிநாட்டு மதுபானவகைகளுக்கு இந்தியாவில் புவிசார் குறியீடின் கீழ் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அடங்கப்பா மதுவுக்கும் உரிமம்:
இதற்கான அறிவிப்பை கடந்த 2011-ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டது. மதுபான வகைகளுக்கு புவிசார் குறியீடின் கூடுதல் பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசு, இந்தியப் பொருள்களுக்கு உரிய கூடுதல் பாதுகாப்பு இதுவரை வழங்கவில்லை.
வழக்கு போட்ட தேவஸ்தானம்:
திருப்பதி கோவிலில் மட்டுமே கிடைக்கும் லட்டு பிரசாதம் பிற இடங்களில் திருப்பதி லட்டு என்ற பெயரில் தயார் செய்யப் பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து திருமலா திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆதரவு தீர்ப்பு:
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து உயர்நீதிமன்றம் தேவஸ்தானத்திற்கு ஆதரவாக அளித்த தீர்ப்பில் புவிசார் குறியீடு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பழங்கால பக்குவத்துக்கும் விரைவில் குறியீடு:
இதற்கிடையில் பழங்காலம் முதலே தென் மாவட்ட தாய்க்குலங்களின் கைப்பக்குவத்தில் உருவான, அதிரசம், தட்டை, முந்திரிக் கொத்து, சீடை, சுசியம், அப்பம் போன்ற உணவுப் பண்டங்கள் வரிசையில், திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன் ஆகியவை உலகப் புகழ் பெற்றுள்ளன.அவற்றுக்கு புவிசார் குறியீடு பெறும் முயற்சியும் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.