திருப்பதியில் 23-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம்: 26ல் பிரம்மோற்சவம் தொடக்கம்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி வரும் 23-ஆம் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. அன்று காலை நடக்கும் ஆர்ஜித சேவை ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 26-ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. அதையொட்டி வருகிற 23-ஆம்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
இதனையொட்டி அன்று நடக்க இருந்த ‘அஷ்டதல பாதபத்மாராதனை' சேவை செய்யப்படுகிறது. பிரம்மோற்சவ விழாவில் அதிகாலையில் நடக்கும் சுப்ரபாத சேவையை தவிர அனைத்து ஆர்ஜித சேவைகளும், வி.ஐ.பி.தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.
ஆனால் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள், மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட புரோட்டோக்கால் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசனத்தில் வரும் பக்தர்களின் கூட்டத்தை பொருத்து தரிசன அனுமதி வழங்கப்படுமா? ரத்து செய்யப்படுமா? என ஆலோசனை செய்யப்படும். ஆனால், ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
தங்கும் விடுதிகளுக்காக கொண்டு வரப்படும் சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படும். தங்கும் விடுதிகள் கட்டி கொடுத்தவர்களுக்கும், தங்கும் விடுதிகள் வேண்டி நேரடியாக வரும் பக்தர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.
முதியோர்கள், ஒரு வருட கைக்குழந்தைகளுடன் வரும் பெண் பக்தர்களுக்கு கோவிலின் தெற்கு மாடவீதிகளில் ஒரு நிழற்கூட மண்டபம் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்படுவார்கள். பின்னர் சுபதம் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தெரிவித்துள்ளார்.
திருமலையில் செப்டம்பர் 26ஆம் தேதி பிரம்மோற்சவத்தின் முதல் நாளன்று கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்படும். அன்று வெங்கடேஸ்வர சுவாமியின் வாகனமான கருடர் சிலைக்கு சிறப்பு பூஜை நடைபெறும். பிரம்மோற்சவத்தை காண தேவர்களை அழைக்கும் விதமாக கருடன் உருவம் பொறித்த மஞ்சள் துணியில் மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட மலர் மாலையை அந்த துணியில் சேர்த்து மேள தாளங்களுடன் நான்கு மாடவீதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வேத மந்திரங்களுடன் தங்ககொடி மரத்தில் கொடி ஏற்றப்படும். அன்றைய தினம் முதல் 9 நாட்களுக்கு பிரம்மோற்சவம் நடைபெறும்.