திருமலை கோவில் ஆனிவார ஆஸ்தானம்: ஆழ்வார் திருமஞ்சனம் - நாளை ஆறு மணிநேரம் மூடல்
திருப்பதி: புதிய கணக்கு தொடங்கும் வகையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 16ம் தேதி ஆனி வார ஆஸ்தானம் நடக்கிறது. இதனை முன்னிட்டு நாளை செவ்வாய் கிழமை, ஜூலை 12ம் தேதி, ஏழுமலையான் கோவில் சுத்தம் செய்யபடும் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவதால் காலை 6 மணி முதல் 12 மணிவரை பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க முடியாது.
திருமலையில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி, ஆனி வார ஆஸ்தானம், யுகாதி பண்டிகை, வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட உற்சவங்களுக்கு முன் வரும் செவ்வாய்கிழமைகளில், ஏழுமலையான் கருவறை முதல் கோவில் முன் வாசல் வரை சுத்தம் செய்யும், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வரவு, செலவு கணக்குகள் சுவாமியிடம் சமர்பிக்கும் ஆனி வார ஆஸ்தானம் ஆடி மாதம் 1ம் தேதி நடந்து வருகிறது. 1956ம் ஆண்டுக்கு பின்பு திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தொடங்கிய பின் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் கோவில் கணக்கு முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் புதிய கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் சம்பிரதாய முறைப்படி ஏழுமலையான் கோவிலில் ஆடி மாதம் முதல் நாள் வரவு, செலவு கணக்குகள் சுவாமி முன் படிக்கப்படும். பின்னர், சுவாமிக்கு புதிய பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்படும். இந்த சேவையில் கலந்து கொள்ளும் பக்தர்களிடமிருந்து தலா 1ரூபாய் பெறப்பட்டு புதிய ஆண்டிற்கான கணக்கு தொடங்கப்படும்.
அதன்படி, ஜூலை, 16ம் தேதி, ஆனி வார ஆஸ்தானம் நிகழ்ச்சி நடக்க உள்ளதால், நாளை செவ்வாய் கிழமை, ஜூலை 12ம் தேதி, ஏழுமலையான் கோவில் சுத்தம் செய்யப்பட உள்ளது.
மூலவர் மீது பட்டு வஸ்திரம் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கல் மண்டபங்கள், தங்க கொடிமரம் உள்ளிட்ட அனைத்து இடங்களும், தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், கட்டி கற்பூரம், மூலிகை திரவியங்கள் கொண்ட கலவையை கோயில் முழுவதும் தெளிக்கப்படும்.
பின்னர் மூலவர் மீது சாத்தப்பட்ட பட்டு வஸ்திரம் அகற்றி சிறப்பு பூஜை செய்யப்பட்டு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்படும். பின்னர் பகல் 12 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். நாளை ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு காலை, 6 மணி முதல் மதியம்,12 மணி வரை, ஏழு மலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 'மதியம், 12 மணிக்கு மேல், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.