சீனிவாசமங்காபுர பிரம்மோற்சவம்... திருப்பதியில் தரிசனத்திற்கு 20 மணிநேரம் காத்திருப்பு
திருப்பதி: திருப்பதி அருகே உள்ள சீனிவாசமங்கபுரத்தில் கல்யாண வெங்கடேஸ்வரர் ஆலய பிரம்மேற்சவ விழாவை காணவரும் பக்தர்கள், திருமலைக்கும் படையெடுப்பதால் ஏழுமலையானை தரிசிக்க 20 மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
திருப்பதியில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மேற்சவம் கடந்த சில நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று கஜவாசனத்தில் சுவாமி வலம் வந்தார். கண்குளிர பெருமாளை தரிசித்த பக்தர்கள் திருமலை ஏழுமலையானையும் காணச்சென்றனர். இதனால் கூட்டம் அதிகரித்தது.
குவிந்த கூட்டம்
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வழக்கமாக, வார இறுதி நாள்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். சனிக்கிழமையன்று மாலை முதலே கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையன்று திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் சுமார் 20 மணி நேரம் காத்திருந்தனர்.
காத்திருப்புக்கு காரணம்
முன்பதிவு மூலம் 300 ரூபாய் கட்டணத்தில், விரைவு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால், இலவச தரிசனத்தில் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்ததாக தெரிவித்துள்ளனர். இதுபோல், நடைபாதை பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர்.
கூடுதல் லட்டுகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூடுதல் விலையில் ரூ.100-க்கு 4 லட்டுக்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகின்றன. கோவில் பின்புறத்தில் இந்த டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கும் ரூ.50-க்கு 2 லட்டுக்கான டோக்கன் வழங்கப்படுகிறது.
லட்டு டோக்கன்
இந்த நிலையில் பாதயாத்திரையாக வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கும் கூடுதல் விலைக்கு ரூ.50-க்கு 2 லட்டுக்கான டோக்கன் வழங்க திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். பக்தர்கள் வெளியில் நீண்ட நேரம் காத்திருக்காமல் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சிலேயே கூடுதல் லட்டுக்கான டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கள்ளத்தனமாக விற்பனை
டோக்கன் வழங்கும் கவுண்ட்டர்களில் முறைகேடுகள் நடந்தால் உடனடியாக பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் கள்ளத்தனமாக லட்டு டோக்கன் விற்பனை செய்தால் ஊழியர்களும், பக்தர்களும் அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.