திருப்பதி பிரம்மோற்சவம் : கருடசேவையை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட சேவையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
திருப்பதி: திருப்பதியில் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட சேவையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். போலீஸ் வைத்திருந்த தடுப்பு வேலிகளை மீறி பக்தர்கள் செல்ல முயன்றதால் பலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. மேலும் வண்ண வண்ண மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
சுவாமி வீதி உலா
கடந்த 5 நாட்களாகவே பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. காலை மாலை இருவேளைகளிலும் ஏழுமலையான் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இன்று நடைபெறும் கருட சேவையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
மோகினி அலங்காரத்தில்
பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளான இன்று எம்பெருமான் ஏழுமலையான், நாச்சியார் திருக்கோலம் எனும் மோகினி அலங்காரத்தில், மாய மோகத்தை போக்கும் விதமாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஸ்ரீ கிருஷ்ணரும் வீதி உலா
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, புடவை அணிந்து நாச்சியர் திருகோலத்தில் தனது அழகை கிருஷ்ணராக தோன்றி அவரே ரசித்தார் என்பது போல் நாச்சியாருடன் ஸ்ரீ கிருஷ்ணரும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நாச்சியார் திருக்கோலத்தில் நான்கு மாட வீதிகளின் வழியே வலம் வந்த மலையப்ப சுவாமியை, லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று பக்தி கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.
சுவாமி வீதியுலாவின் போது பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த கலைஞர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. கருட சேவையை காண இன்று காலை முதலே பக்தர்கள் திருப்பதியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
3 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளதால், திருமலை எங்கும் பக்தர்களின் கூட்டமே தென்படுகின்றது. இதையடுத்து பாதுகாப்பு பணிகளில் 4 ஆயிரத்து 600 போலீசார் ஈடுப்பட்டுள்ளனர். கோவில் வளாகம் முழுவதும் 710 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு 550 பஸ்கள் மூலம் பக்தர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத கூடத்தில் காலை 8 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம், நான்கு மாட வீதியில் சுவாமி வீதிஉலா காண வரும் பக்தர்களுக்காக நாளை காலை 12 மணி முதல் 5 மணி வரை 2 மணி நேரத்திற்கு 1 முறை பால், மோர், ஆகியவை வழங்க தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.