திருப்பதி பிரம்மோற்சவம்: நாளை கருடசேவை... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான கருட வாகனசேவை ஞாயிறன்று நடைபெறுவதை முன்னிட்டு அங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களும் சேஷ வாகனம், ஹம்சவாசனம், சிம்மவாகனம், முத்துப்பந்தல் வாகனங்களில் மலையப்ப சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கற்பக விருட்ச வாகனம்
பிரம்மோற்சவ விழாவின் 4வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா நடைபெற்றது. இறைவன் ஏழுமலைவாசன் கேட்ட வரம் தருபவன் , அந்த இறைவனே கற்பகவிருட்ச வாகனத்தில் வலம் வருவதை பக்திப்பரவசத்துடன் கண்டு தரிசனம் செய்தனர். இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை சர்வ பூபால வாகன வீதிஉலாவும் நடக்கிறது.
நடனமாடிய பக்தர்கள்
மலையப்ப சவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வீதி உலா வரும் போது அவருக்கு முன்னால் பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடியபடி சென்றனர். கோலாட்டம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள் சாமி வீதி உலாவுக்கு முன்னால் அணிவகுத்து சென்றன.
கருட வாகனம்
மகாவிஷ்ணுவின் வாகனம் கருடன். இந்த கருடவாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளுவது சிறப்பம்சம். பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான ஞாயிறன்று காலை மோகினி அலங்காரத்தில் இறைவன் எழுந்தருகிறார் அன்றிரவு கருடவாகன சேவை நடைபெறுகிறது. இதனைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிகின்றனர். 5 லட்சம் பக்தர்கள் வரை திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இரண்டாம் கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆண்டாள் சூடிய மாலை
திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவிற்கு ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை மற்றும் கிளி, வஸ்திரம் ஆகியவை கொண்டு செல்லப்படுவது வழக்கம்.தற்போது திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இதற்காக, ஆண்டாள் சூடிய மாலை கொண்டு செல்லும் நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று நடைபெற்றது. ஆண்டாளுக்கு பிரம்மாண்ட மாலை சூடப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத் தப்பட்டன. பின்னர் ஆண்டாள் சூடிய மாலை, கிளி மற்றும் வஸ்திரம் ஆகியவை மேள தாளங்கள் முழங்க மாட வீதிகள் வழியாக திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது.இவை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 5வது நாளன்று ஞாயிறன்று பெருமாளுக்கு அணிவிக்கப்படும்.