திருப்பதி பிரம்மோற்சவம்: கருடசேவையைக் காண குவியும் பக்தர்கள் - உச்சக்கட்ட பாதுகாப்பு
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரம்மோற்சவ விழாவில் சிகர நிகழ்ச்சியான கருட வாகன சேவை வெள்ளிக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு அங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 5 லட்சம் பக்தர்கள் வரை திருமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினசரியும் பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் வருகை தருவது வாடிக்கை. தற்போது பிரம்மோற்சவம் நடைபெறுவதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா திங்கட்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளினார்.
மலையப்பசுவாமி உலா
இரண்டாம் நாளான செவ்வாய்கிழமை காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரை சிறிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் உலா வந்தார். அன்றிரவு அம்ச வாகன வீதிஉலா, 5ம்தேதி காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை சிம்ம வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளினார். மூன்றாம் நாள் இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி நான்கு மாத வீதிகளில் வலம் வந்தார்.
7ம் தேதி கருடசேவை
இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் வலம் வந்த மலையப்பசுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று சர்வ பூபால வாகனத்தில் மலையப்பசுவாமி உலா வருகிறார். நாளை 7தேதி காலை மோகினி அவதாரத்தில் உற்சவர் மலையப்பசாமி பல்லக்கில் வீதிஉலா வருகிறார். மாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணிவரை ஊஞ்சல் சேவையும், இரவு 7.30 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணிவரை தங்க கருடவாகன சேவையும் நடைபெற உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மாலை
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடி கொடுத்த கிளி, மாலை மற்றும் சேலை நேற்று திருமலைக்கு கிளம்பியது. இன்று அந்த மாலையும் ஆபரணங்களும் கோயிலில் வழங்கப்பட உள்ளது. நாளை காலை மோகினி அலங்காரத்தின் போது ஆண்டாளின் கிளி, மாலை சூடி அலங்காரமாய் எழுந்தருளுவார் மலையப்பசுவாமி. இரவு தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் பவனி வருவதை தரிசிக்க திருமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தங்கத் தேரோட்டம்
8ம்தேதி காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரை அனுமந்த வாகன வீதிஉலா, மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணிவரை தங்கத் தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை யானை வாகன வீதிஉலா, 9ம்தேதி காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரை சூரிய பிரபை வாகன வீதிஉலா, பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 4 மணிவரை ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை ஊஞ்சல் சேவை, இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை சந்திர பிரபை வாகனவீதி உலா நடைபெறும்.
தேரோட்டம்
10ம் தேதி காலை 7 மணியளவில் தேரோட்டம், இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை ஊஞ்சல் சேவை, இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை குதிரை வாகன வீதிஉலா, 11ம்தேதி அதிகாலை 3 மணியில் இருந்து 6 மணிவரை பல்லக்கு உற்சவம் மற்றும் தங்க திருச்சி வாகன வீதிஉலா, அதைத்தொடர்ந்து காலை 6 மணியில் இருந்து 9 மணிவரை கோவில் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி, இரவு 9 மணியில் இருந்து 10 மணிவரை கொடியிறக்கத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.