அக்.8 ல் முழு சந்திர கிரகணம்: திருப்பதி கோவில் நடை அடைப்பு!
திருப்பதி: முழு சந்திர கிரகணம் வரும் 8 ஆம் தேதி நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அன்றைய தினம் காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரியன், பூமி, நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, நிலவை பூமியின் நிழல் முழுமையாக மறைத்துவிடும். இந்த நிகழ்வே சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது.
சந்திரகிரணம்
சந்திர கிரகணம் குறித்து மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் கோளரங்கக் கண்காணிப்பாளர் ராஜேந்திர பிரசாத் குப்த் கூறுகையில்,"மதியம் 2.44 மணிக்கு தொடங்கி மாலை 6.04 மணி வரை நீடிக்கும் இந்த சந்திர கிரகணத்தில், நிலவு முழுமையாக மறையும் நிகழ்வு 23 நிமிடங்கள் வரை இருக்கும்.
எங்கு தெரியும்
இந்த சந்திர கிரகணத்தை வடகிழக்குப் பகுதிகளான திரிபுரா, இம்பால், கோஹிமா பகுதிகளில் தெளிவாகக் காண முடியும்" என்றார்.
இது, இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் இறுதி சந்திர கிரகணம் என்றும் ராஜேந்திரபிரசாத் குப்தா கூறினார்.
திருப்பதி கோவில்
கிரகண நேரத்தில் ஆன்மிகக் காரணங்களுக்காக திருப்பதி கோயில் நடை அடைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 8ஆம் தேதி காலை 9.30 மணி வரை பொது தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு மேல் கோயிலுக்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அனைவரும் கோயிலில் இருந்து வெளியேறிவிட வேண்டும். காலை 10.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.
பரிகாரபூஜைகள்
சந்திர கிரகணம் முடிந்த பின்னர், இரவு 8 மணிக்கு மேல் கோவில் நடை திறக்கப்படும். அர்ச்சகர்கள் மற்றும் வேத விற்பன்னர்கள் மட்டும் கோவிலுக்குள் சென்று புண்ணியாவஜனம் உள்ளிட்ட சித்தி காரியங்களை நிறைவேற்றுவார்கள். அவை முடிந்த பின்னர் மூலவருக்கு நைவேத்யம் படைக்கப்படும்.
பக்தர்கள் அனுமதி
இரவு 10.30 மணிக்கு மேல் நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதைத்தொடர்ந்து, வழக்கம்போல் கோவில் நடைசாத்தப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.