திருப்பதியில் உஷார் நிலை... வெடிபொருள் பறிமுதலால் பக்தர்களுக்கு எச்சரிக்கை!
திருப்பதியில் பக்தர்களிடம் தீவிர சோதனை வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து பக்தர்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
திருப்பதி: ஆந்திர வனப்பகுதியில் வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து திருப்பதி வரும் பக்தர்களிடம் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் கண்காணிப்புடன் இருக்கும்படியும் கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் ஸ்ரீவாருமெட்டு என்ற இடத்தில் நேற்று ரோந்து சென்ற போலீசார் வெடிகுண்டுகளை வெடிக்க பயன்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்களை கண்டுபிடித்தனர். இந்த வழக்கை யார் விசாரிப்பது என்று போலீசாரிடையே எல்லைப் பிரச்னை ஏற்பட்டது.
இறுதியாக செம்மரக்கடத்தல் பிரிவு ஐஜி உத்தரவின் பேரில் வழக்கு எஸ்பி அபிஷேக்கிற்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து ரேனிகுண்டா விமான நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதே போன்று திருப்பதிக்கு வரும் பக்தர்களிடம் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கண்காணிப்புடன் இருக்குமாறு நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருப்பதியில் எப்போதுமே சோதனை இருக்கும் நிலையில் வழக்கத்தை விட அதிகமான சோதனை இருப்பதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.
வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்களை யார் வீசிச்சென்றது என்று தெரியாத நிலையில் பொருட்கள் சுருட்டப்பட்டிருந்த கோணிப்பையில் திருச்சி என்று எழுதி இருந்ததால், இதில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா, அல்லது வனப்பகுதியில் வீசப்பட்டிருந்த பையை மர்ம நபர்கள் பயன்படுத்தினரா என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் திருப்பதியில் வெடிபொருட்கள் தயாரிக்கும் உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.