திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது - பக்தர்கள் குவிந்தனர்
திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க திரண்டுள்ளனர். ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்கினார்.
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கோவில் மாட வீதிகள், முக்கிய வளைவுகள், சந்திப்புகளில் வண்ண மின்விளக்கு அலங்காரம், மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பிரம்மோற்சவ விழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவது வாடிக்கை
பிரம்மோற்சவ விழா
ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா 9 நாட்கள் வரை கோலாகலமாக விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நேற்று மாலை நவதானியத்தை முளைவிடும் அங்குரார்ப்பண நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. விழா தொடங்கியதன் அறிகுறியாக இன்று கோவில் வளாகத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க பிரம்மோற்சவ விழா கொடி ஏற்றப்பட்டது. அப்போது, பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு ஏழுமலையானை வணங்கினர்.
மலையப்ப சுவாமி வீதி உலா
விழாவின் முதல் நாளான இன்று இரவு, பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் நான்கு மாட வீதிகளில் பவனி வந்தார்.
இதைத் தொடர்ந்து செவ்வாய்கிழமையன்று காலை சின்ன சேஷ வாகனம், இரவு அம்ச வாகனத்தில் வலம் வருகிறார். 5ம் தேதி காலை சிம்ம வாகனம், இரவு முத்துப்பந்தல் வாகனம், 6ம் தேதி காலை கல்ப விருட்ச வாகனம், இரவு சர்வ பூபால வாகனத்தில் மலையப்பசாமி உலா வருகிறார்.
கருடசேவை வாகனம்
7ம் தேதி காலை மோகினி அவதாரத்தில் பல்லக்கில் உற்சவம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து அன்றிரவு, முக்கிய நிகழ்வான கருட சேவை நடக்கிறது. தங்க கருட வாகனத்தில் விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்து ஏழுமலையான் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தேராட்டம்
இதை தொடர்ந்து, 8ம் தேதி காலை அனுமந்த வாகனம், மாலையில் தங்க தேரோட்டம், அன்றிரவே கஜ வாகன சேவையும் நடக்கிறது. 9ம் தேதி காலை சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் இரு துருவங்களை போல ஏழுமலையான் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். 10ம் தேதி காலை ரத உற்சவம், இரவு குதிரை வாகனத்தில் வீதி உலா வருகிறார்.
பிரம்மோற்சவம் நிறைவு
11ம் தேதி அதிகாலை பல்லக்கு, திருச்சி உற்சவம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து சக்கர ஸ்நானம், இரவு கொடி இறக்கம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. விழாவை முன்னிட்டு கோவில் மாட வீதிகள், முக்கிய வளைவுகள், சந்திப்புகளில் வண்ண மின்விளக்கு அலங்காரம், மலர் அலங்காரங்கள் ஜொலிக்கிறது.
7 லட்சம் லட்டுகள்
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 7 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. திருப்பதிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 750 பஸ்கள் இயக்கப்படுகிறது. கருட சேவைக்காக 7, 8 ஆகிய தேதிகளில் இருசக்கர வானங்கள் மலைப்பாதையில் செல்ல தடை உள்ளது. சுமார் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கருட சேவை நாளில் மட்டும் கூடுதலாக 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
கேரளா, தமிழ்நாட்டில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டதை முன்னிட்டு திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெடி குண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 22 ஆம்புலன்சுகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது.