திருப்பதி லட்டு விற்பனையில் நஷ்டமாம்.. எவ்வளவு தெரியுமா?
திருப்பதி: திருப்பதி கோயில் லட்டு விற்பனையில் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது. இதனால் இலவசமாக வழங்கப்படும் லட்டு எண்ணிக்கையை குறைக்க ஆலோசித்து வருகிறார்களாம்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் பல்லாயிருக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு செல்லும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது.
திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் இந்த லட்டு விநியோகம் ஆரம்பித்து 300 வருடத்தை தாண்டி விட்டதாம். 1715 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி திருப்பதி கோயிலில் லட்டுவை அறிமுகம் செய்துள்ளனர்.அன்று முதல் லட்டு பிரசாதம் அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில் பக்தர்கள் வசதிக்காக பெரிய லட்டு ரூ.25க்கு விற்கப்படுகிறது. கடந்த 11 ஆண்டுகளாக இதே விலை தான். ஆனால் ஒரு லட்டு செய்வதற்கு ஆகும் செலவு ரூ.32.50 ஆகும். மானிய விலையில்தான் லட்டு விற்கப்படுகிறது.
ஒரு லட்டுக்கு ரூ.7.50 நஷ்டம் ஏற்படுகிறதாம். கடந்த 3 ஆண்டுகளாக இதே நிலை தான் நீடித்து வருகிறதாம். தர்ம தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு ஒரு லட்டு ரூ.10 என்றும் விற்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.23 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. நடந்தே வந்து ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு இலவசமாகவே லட்டு வழங்கப்படுகின்றன.
இதன் மூலம் ரூ.22.7 கோடி இழப்பு உண்டாவ தேவஸ் போர்டு கூறியுள்ளது. ரூ.300 பணம் கட்டி சிறப்பு தரிசனமாக ஏழுமலையை வணங்குகிறவர்களுக்கு 2 லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 70 லட்சம் பக்தர்கள் சிறப்பு தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர்.
கடந்த ஆண்டு மட்டும் 10 கோடி லட்டுகள் விற்பனை ஆகி உள்ளதாம். இதனால் ஆண்டுக்கு ரூ.140 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே நஷ்டத்தை ஈடுகட்ட லட்டு விலையை உயர்த்தலாம் என்ற யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. விலையை உயர்த்தாமல் அதற்கு பதிலாக இலவச லட்டு எண்ணிக்கையை குறைக்கவும் ஆலோசனை நடைபெற்று வருகிறதாம்.
ஏழுமலையான தரிசிக்க எப்படி வரிசையில் நிற்கின்றனரோ அதோ போல லட்டு பிரசாதம் வாங்கவும் வரிசையில் காத்திருந்துதான் வாங்கவேண்டும்.