திருப்பதியில் குட்டி விமானங்கள் மூலம் கேமரா கண்காணிப்பு - பலப்படுத்தப்படும் பாதுகாப்பு!
ஹைதராபாத்: திருமலை திருப்பதியில் பாதுகாப்பினை பலப்படுத்தும் வகையில் விரையில் கண்காணிப்பு ஏரியல் வாகனங்கள் மக்கள், பக்தர்கள் மற்றும் வாகனங்களை கண்காணிக்க உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உயர்தரமான காட்சியமைப்பு கொண்ட கேமராக்களுடன் இரண்டு ட்ரோன்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலானது மிகவும் பரபரப்பான ஒரு கோவில் மேலும், கிட்டதட்ட 50,000 பேர் தினசரி இங்கு தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர்.
பிரமோஸ்தவ கண்காணிப்பு:
9 நாட்கள் பிரமோஸ்தவம் நடைபெறுகின்ற போதே இந்த கேமரா கண்காணிப்பு தொடங்கி விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அவ்விழாவினை முன்னிட்டு கிட்டதட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இங்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்முறையாக கேமராக்கள்:
"நாங்கள் முதல்முறையாக கேமராக்களை திருமலையில் உபயோகிக்க உள்ளோம். இதன் மூலம் மக்களின் நடவடிக்கைகளை தெளிவாக கண்காணிக்க முடியும்.
தவறுகளைத் தடுக்கலாம்:
மேலும், தவறுகளையும் முன்கூட்டியே தடுக்க முடியும்" என்று திருப்பதி காவல்துறை அதிகாரி கோபிநாத் ஜெட்டி தெரிவித்துள்ளார்.
100 அடி உயரத்தில் கண்காணிப்பு:
இந்த ஆளில்லா குட்டி விமானங்கள் எனப்படும் ட்ரோன்கள் கிட்டதட்ட 100 அடி முதல் 200 அடி உயரத்தில் பறந்து கண்காணிப்பில் ஈடுபடும். மேலும், மீண்டும் சார்ஜ் செய்யும் வகையிலான பேட்டரிகளைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆன்மிக விதிகளின் காரணமாக கோவில் கருவறைக்கு மேல் இந்த ட்ரோன்கள் பறக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.