குவியும் ஷேர்கள், காணிக்கைகள்.. இந்தியாவின் நம்பர் 1 செல்வந்தர் திருப்பதி ஏழுமலையான்!
திருப்பதி: உலக பிரசித்தி பெற்ற திருப்பதி கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பக்தர்கள் வசதிக்கேற்ப, ஷேர்களை காணிக்கையாக செலுத்தும் வகையில் திருப்பதி ஏழுமலையான் பெயரில் டிமேட் கணக்கை தேவஸ்தானம் துவக்கி உள்ளது. ஏழுமலையானின் சொத்து மதிப்பு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும், இந்த கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள், நேர்த்திக்கடனை நிறைவேற்ற, தங்கம், வெள்ளியால் ஆன ஆபரணங்கள், பணம் மற்றும் இதர பொருட்களை காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம். இது தவிர, கோவிலுக்கு நன்கொடையாகவும் பணம், தங்கம், மற்றும் வெள்ளி ஆபரணங்கள் வருகின்றன.
இந்நிலையில் பக்தர்கள் வசதிக்கேற்ப, ஷேர்களை காணிக்கையாக செலுத்தும் வகையில் திருப்பதி ஏழுமலையான் பெயரில் டிமேட் கணக்கை தேவஸ்தானம் துவக்கி உள்ளது. ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேசன் ஆப் இந்தியா நிறுவனத்தின் மூலம் திருப்பதி ஏழுமலையான் பெயரில் 1601010000384828 என்ற டிமேட் கணக்கை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தொடங்கி உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சென்ட்ரல் டெபாசிட்டரிஸ் சர்வீஸ் நிறுவன அதிகாரிகள் திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ்வை சந்தித்து கணக்கு துவக்கத்திற்கான நடைமுறைகளை முடித்துள்ளனர்.
நன்கொடைகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்கள் போல நன்கொடைகளும் அதிகரித்து வருகிறது. இதனால் ஆண்டுக்கு ஆண்டு ஏழுமலையான் சொத்து உயர்ந்து கொண்டே செல்கிறது.
பக்தர்கள் காணிக்கை
மலைப்பாதை அமைக்கப்பட்ட பிறகே பக்தர்கள், வருகையும், வருமானமும் அதிகரிக்க தொடங்கியது. திருப்பதி ஏழுமலையானுக்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஏராளமான சொத்துக்கள் உள்ளது.
இதுபற்றி சர்ச்சைகள் ஏற்படவே சொத்து மதிப்பை கணக்கீட்டு வெளியிட ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி கோவில் சொத்துக்கள் கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டது.
ரூ. 2 லட்சம் கோடி
2009ம் ஆண்டு எடுத்த கணக்குபடி கோவிலுக்கு 4 லட்சத்து 4143.67 ஏக்கர் நிலம் இருந்தது. மேலும் கோவில் கட்டிடத்தின் மதிப்பு அரசாங்க நிர்ணய விலைப்படி ரூ.33,447.74 கோடியாக இருந்தது. ஆனால் இதன் வெளி மார்க்கெட் மதிப்பு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆண்டு வருமானம்
ஏழுமலையான் பெயரில் வங்கியில் உள்ள முதலீடு ரூ.10 ஆயிரம் கோடிக்கு அதிகமாக உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் ஆண்டுக்கு ரூ.744 கோடி கிடைக்கிறது.
அன்னதான நன்கொடை
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடைவிடாமல் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக தனியாக அன்னதான டிரஸ்ட் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நித்ய அன்னதான டிரஸ்டுக்கு 2015 ஏப்ரல் மாதம் வரை ரூ.591 கோடி நன்கொடையாக வந்து உள்ளது.
பல கோடி வருமானம்
இது தவிர பிரானதான டிரஸ்டுக்கு ரூ.200 கோடியும் இதர டிரஸ்டுக்கு ரூ.300 கோடியும் வந்து உள்ளது.மேலும் தினந்தோறும் டிரஸ்டுகளுக்கு நன்கொடை வந்த வண்ணம் உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் வசூலாகிறது.
உண்டியல் வருமானம்
1958-ம் ஆண்டு நவம்பர் 28ம்தேதி ஒரு நாள் உண்டியல் வருமானம் ரூ.1 லட்சத்தை தாண்டியது. பெரிய சாதனையாக கருதப்பட்டது. அதுவும் ஒரே பக்தர் ரூ.1 லட்சம் கரன்சி நோட்டுகளை கட்டு கட்டாக உண்டியலில் போட்டதால் இந்த சாதனை ஏற்பட்டது. இந்த 1 லட்சத்தை விடுத்து கணக்கிட்டதில் ஒரு நாள் வசூல் ரூ.824.75 பைசா தான் கிடைத்தது.
பக்தர்கள் தரிசனம்
ஆனால் தற்போது ஒரு நாள் உண்டியல் வருமானம் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி தாண்டி வசூலாகிறது. கடந்த 2010ம் ஆண்டு 2.44 கோடி பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். ஆனால் நடப்பு 2015ம் ஆண்டில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 1.50 கோடி பேர் ஏழுமலையானை தரிசனம் செய்து உள்ளனர்.
ஒரே நாள் காணிக்கை
தற்போது பிரம்மோற்சவம் நடைபெற்று வரும் நிலையில் வியாழக்கிழமையன்று ஒரே நாளில் தேவஸ்தான உண்டியலில் ரூ.1 கோடியே 14 லட்சத்து 45 ஆயிரத்தை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மூலம் ரூ.32 ஆயிரத்து 430ம், பிரசாத விற்பனை மூலம் ரூ.28 லட்சத்து 39 ஆயிரத்து 271ம், தங்கும் அறை வாடகை மூலம் ரூ.10 லட்சத்து 67 ஆயிரத்து 270ம், புத்தக விற்பனை மூலம் ரூ.30 ஆயிரமும் என பிரமோற்சவத்தின் 2வது நாள் மட்டும் ரூ.1.54 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
நாட்டின் முதல் செல்வந்தர்
நாளுக்கு நாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது போல் உண்டியல் மற்றும் நன்கொடை வருமானமும் அதிகரித்து வருவதன் மூலம் நாட்டின் முதல் செல்வந்தர் நிலையில் ஏழுமலையான் உள்ளார். ரொக்கம், தங்கம் மற்றும் விலைஉயர்ந்த ஆபரணங்கள் காணிக்கைகளாக உண்டியலில் செலுத்தப்பட்டு வருகின்றன.
ஷேர்கள் காணிக்கை
இதேபோன்று பக்தர்கள் சிலர் சாதாரண நடைமுறையிலேயே ஷேர்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இதுவரை பல ஆண்டுகளுக்கு பல லட்சம் மதிப்புள்ள ஷேர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக வந்துள்ளது.தற்போது டிமேட் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதன் மூலமாக உலகத்தின் எந்த மூலையில் இருந்தும், பக்தர்கள் ஆன்லைன் மூலமாக தங்களது பங்குகளையும் கோயில்நிர்வாகத்துக்கு காணிக்கையாக மாற்றம் செய்யலாம். இதேபோல் உலகின் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும், டிமேட் கணக்கு வைத்திருக்கும் பக்தர்கள், சந்தை பரிவர்த்தனை மூலமாகவே திருமலை திருப்பதி தேவஸ்தான டிமேட் கணக்கில் ஷேர்களை மாற்றித்தரலாம்.