17ம் தேதி கண்டிப்பாக சபரிமலை போவேன்.. தடுத்துப் பாருங்கள்.. திருப்தி தேசாய் சவால்
யார் தடுத்தாலும் சபரிமலை செல்வேன் என திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சபரிமலை: 'நானும் என்னுடன் ஐந்து பெண்களும் வரும் 17ஆம் தேதி சபரிமலைக்கு கண்டிப்பாக போவோம். எங்களை யாரும் தடுக்க முடியாது' என்று பெண் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் கூறியுள்ளார்.
அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு போகலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது முதல் பல்வேறு சர்ச்சைகள், குழப்பங்கள், போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், 2 மாத கால மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக வருகிற சனிக்கிழமை அதாவது 17-ந்தேதி சபரிமலையில் நடை திறக்கப்படுகிறது.
மேலும் 5 பெண்கள்
அந்த நாளில்தான் கோயிலுக்குள் நுழைவேன் என்று மராட்டியத்தை சேர்ந்த திருப்தி தேசாய் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல், தன்னுடன் மேலும் 5 பெண்கள் வரவிருப்பதாகவும், அவர்கள் அனைவருமே தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்கள்தான் என்றும் கூறினார்.
ஊர் திரும்ப மாட்டேன்
சபரிமலை என்றில்லாமல் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கும் திருப்தி தேசாய், வருகிற சனிக்கிழமை அன்று அய்யப்பனை தரிசிக்காமல் ஊர் திரும்ப மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
கடிதம் அனுப்பி உள்ளேன்
இதுகுறித்து அவர் மேலும் சொல்லும்போது, "சபரிமலைக்கு நாங்கள் வரும் அன்றைய தினம் கேரள அரசு எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என இ-மெயில் மூலம் கடிதம் ஒன்றினை அனுப்பியிருக்கிறேன். அந்த கடிதத்தில் தாங்கள் சாமி தரிசனம் முடிந்து கேரளாவில் இருந்து செல்லும் வரை தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளேன்.
உறுதி செய்த கேரள அரசு
அதேபோல, பிரதமருக்கும் இதுபோன்று பாதுகாப்பு கேட்டு கடிதம் இ-மெயில் மூலம் அனுப்பி உள்ளேன். எப்படி இருந்தாலும் சரி வரும் சனிக்கிழமை கோயிலுக்குள் கண்டிப்பாக போவேன்" என்று கூறியுள்ளார். இதையடுத்து கேரள அரசும் திருப்தி தேசாயின் கடிதம் கிடைத்திருப்பதாகவும், உரிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.