அவதூறு வழக்கில் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரிய பிரேமலதா மனு சுப்ரீம்கோர்ட்டில் தள்ளுபடி!
டெல்லி: அவதூறு வழக்கு ஒன்றின் ஜாமீன் நிபந்தனைகளில் தனக்கு விலக்கு அளிக்கக் கோரி தேமுதிக மகளிர் அணி தலைவர் பிரேமலதா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி, திருப்பூரில் மக்கள் நலக் கூட்டணி நடத்திய தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரேமலதா பேசினார். அப்போது அவர், கோவை அருகே கன்டெய்னர் லாரிகளில் பிடிபட்ட ரூ.570 கோடி பணம் சிறுதாவூர் பங்களாவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆனந்தன் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பிரேமலதா மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் பிரேமலதாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி அவர் சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த நிபந்தனையை தளர்த்தக் கோரி பிரேமலதா சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை சென்னைஇ உயர் நீதிமன்றம் நிராகரித்தது. எனவே, இது தொடர்பாக பிரேமலதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி.கோபால கெளடா, ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்h நேற்று விசாரணை நடத்தினர். அப்போது பிரேமலதா மீதான பிரதான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் விசாரிப்பது ஏற்புடையதாக இருக்காது. எனவே, மனுதாரார் சென்னை உயர் நீதிமன்றத்தை மீண்டும் அணுகி முறையிட அறிவுறுத்துகிறோம் என கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.