மே.வ. தேர்தல்: திரிணாமுல் காங்கிரஸுக்கு அமோக வெற்றி; ஆட்சியை தக்க வைக்கிறார் மமதா-கருத்து கணிப்புகள்
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
294 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டசபைக்கு ஏப்ரல் 4 முதல் மே 5-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் இடதுசாரிகள்+ காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இடதுசாரிகளும் காங்கிரஸும் கூட்டனி என அறிவிக்காமலேயே கைகோர்த்து களமிறங்கியுள்ளன. இத்தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸே அதிக இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏபிபி- நீல்சன்
ஏபிபி நியூஸ்- நீல்சன் நடத்திய கருத்து கணிப்பில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 197, இடதுசாரிகள் 74, காங்கிரஸ் 16 இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதாவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்கிறது இக்கருத்து கணிப்பு.
மமதாவுக்கு ஜே
முதல்வர் மமதா பானர்ஜியின் செயல்பாடு குறித்த கேள்விக்கு மிக நன்று- 18%; நன்று- 40%; சுமார்- 25%; மோசம்- 12%; மிக மோசம்- 4% என கருத்து தெரிவித்துள்ளனர்.
மமதாவே முதல்வர் வேட்பாளர்
முதல்வர் வேட்பாளரைப் பொறுத்தவரையில் மமதாவுக்கு 62% ஆதரவு இருக்கிறது. இடதுசாரிகளின் புத்ததேவ் பட்டாச்சார்ஜிக்கு 12%; ரூபா கங்குலிக்கு 3% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
200 இடங்களில் திரிணாமுல் வெல்லும்
இதேபோல் பெங்காலி நியூஸ் சேனல் 24 Ghanta மற்றும் ஜிஎப்கே இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் 200 இடங்களைக் கைப்பற்றும் என்றும் இடதுசாரிகள்- காங்கிரஸ் 90 இடங்களில் வெல்லக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக ஒரு இடத்தில் வெல்லும் சாத்தியம் இருக்கிறதாம்.
மமதா ஆட்சி ஓகே
5 ஆண்டுகால திரிணாமுல் ஆட்சிக் காலத்தில் சாலை வசதி, குடிநீர்வசதி, மின்சாரம், சுகாதாரம், கல்வி, பொதுவிநியோக முறை சிறப்பாக இருந்ததாக 80%-க்கும் அதிகமானோர் கூறியுள்ளனர். வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முதலீட்டில் 50%க்கும் அதிகமானோர் மட்டுமே மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.