அமித்ஷாவுக்கு மதிய உணவு கொடுத்து.. கடைசியில் அல்வாவும் தந்த பாடகர்.. திரிணாமுல் காங். பரபரப்பு
கொல்கத்தா: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடு தேடி வந்து மதிய உணவருந்தி சென்ற மேற்குவங்க நாட்டுப்புற பாடகரை தன் வலையில் வீழ்த்தி உள்ளது திரிணாமுல் காங்கிரஸ். பாடகர் பசுதேப் தாஸ் பவுல், தனக்கு பாஜக எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் மீண்டும் நெருக்கமாகி உள்ளார்.
தமிழகத்தைப் போல் மேற்கு வங்கத்திலும் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற போகிறது. மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதல்வருமான மம்தா பானார்ஜி தீவிரமாக வேலை செய்து வருகிறார்.
இதேபோல் அங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் சவால் அளிக்கும் வகையில் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தை பாஜக முன்னெடுத்து வருகிறது. அமித்ஷாவின் வியூகத்தால் ஆடிப்போய் கிடக்கும் மம்தா பானர்ஜி, துணைக்கு பிரசாந்த் கிஷோரை அணுகி உள்ளார்.
தூக்கிப் போடும் டயர்களால் காலணிகள்.. பெண் தொழில்முனைவோர் கூறும் மூன்று முத்தான காரணங்கள்!
மம்தாவும் வேகம்
பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களிடையே தினசரி மோதலும், வன்முறையுமாக மேற்கு வங்கம் காணப்படுகிறது. எப்படியாவது இந்த முறை மேற்குவங்கத்தை வென்றே தீர வேண்டும் என்று வேகமெடுத்துள்ள அமித்ஷா, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது வீயூகத்தால் 9 எம்ல்ஏக்கள் உள்பட திரிணாமுல் தலைவர்கள் பாஜகவில் இணைந்து மம்தாவை அதிர வைத்தனர்.
அண்மையில் தாக்குதல்
இந்நிலையில் அதற்கு பதிலடியாக மம்தாவின் கட்சியும் பாஜகவின் தலைவர்களை ஈர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இரு தரப்பும் கடுமையாக மோதிக்கொண்டிருக்கும் நிலையில் அண்மையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கார் தாக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மம்தா- மத்திய அரசு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
அமித்ஷா மதிய விருந்து
இந்தசூழலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபல பெங்காலி நாட்டுப்புற பாடகர் பசுதேப் தாஸ் பவுலை பாஜகவில் சேர்க்க முயற்சி நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு போல்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு கடந்த ஞாயிறு அன்று சென்று, மதிய உணவு சாப்பிட்டார். அப்போது அமித் ஷாவுக்காக தாஸ் சில நாட்டுப்புற பாடல்களை கூட பாடியிருந்தார். இதனால் அவர் பாஜகவில் சேர்ந்து விட்டதாக பரபரப்பு எழுந்தது.
மம்தாவுக்கு ஆதரவு
ஆனால் அதிரடி திருப்பமாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த பாடகர் பசுதேப் தாஸ் பவுல், பாஜக தனக்கு எந்த வகையிலும் உதவவில்லை என்று கூறியதுடன், மதிய உணவு சாப்பிட்டு போன பின் அமித் ஷா உடன் பேசவில்லை என்று மறுத்தார். டிசம்பர் 29 ம் தேதி போல்பூரில் நடைபெறும் முதல்வர் மம்தா பானர்ஜியின் பேரணியில் நான் பாடுவேன் என்று தாஸ் அறிவித்துள்ளார்.
உதவி கிடைக்கவில்லை
இது தொடர்பாக பாடகர் தாஸ் கூறுகையில், "அமித் ஷா என் வீட்டிற்கு வந்து, மதிய உணவு சாப்பிட்டுவிட்டு கிளம்பினார். அவருடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்கள் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அமித் ஷாவின் வருகைக்குப் பிறகு பாஜகவினர் யாரும் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. எனது மகளுக்கு உயர் படிப்புக்கு உதவுமாறு உள்துறை அமைச்சரைக் கோரலாம் என்று நினைத்தேன், ஆனால் நடக்கவில்லை என்றார்.
எப்படி மாறினார்
இதனிடையே திரிணாமுல் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மொந்தால் கூறுகையில், பாசுதேப் தாஸ் பவுலின் மகள் உயர் படிப்பை முடிக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கல்வி பிரிவு உதவும். அமித் ஷா ஒரு நாடகம் நடத்த பாடகரின் வீட்டிற்கு வந்தார். அவர்களின் நலன் குறித்து அவர் பெரிதாக அக்கறை காட்டவில்லை. அவரது மகளின் படிப்பின் அனைத்து செலவுகளையும் நாங்கள் ஏற்க முடிவு செய்துள்ளோம், " என்றார்.
உதவி தருவோம்
ஆனால் இதற்கு பதில் அளித்துள்ள பாஜக தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ரா, "திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, 10 ஆண்டுகளாக பாடகரின் குடும்பத்தை கவனிக்கவில்லை, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்குப் பின்பே உதவ திரிணாமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், உதவி தேவைப்படும் அத்தகைய குடும்பங்களை அடையாளம் காண்பதில் பாஜக முன்னணியில் உள்ளது என்றே அர்த்தம், "என்று கூறினார்.