மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் லட்சுமி ரத்தன் சுக்லா ராஜினாமா - மமதா பானர்ஜிக்கு அடுத்த ஷாக்
மேற்கு வங்க மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் லட்சுமி ரத்தன் சுக்லா ராஜினாமா செய்துள்ளார்.
கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவும் விளையாட்டுத்துறை அமைச்சருமான லட்சுமி ரத்தன் சுக்லா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் சுவேந்து அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் மமதாபானர்ஜியின் அமைச்சரவையில் இருந்து மற்றொரு அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது கடும் பின்னடைவாக கருதப்படுகிறது.
பீகார் சட்டசபைத் தேர்தல் வெற்றியை தொடர்ந்து, பாஜக தற்போது தனது கவனத்தை மேற்கு வங்க மாநிலத்தின் மீது திருப்பி உள்ளது. 'மிஷன் பெங்கால்' என்ற பெயரில் தேர்தல் பணிகளை பாஜக முன்னெடுத்துள்ளது.
அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. இந்த முறை ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் அக்கட்சி தலைவர்களுக்கு வலை வீசி வருகிறது. கடந்த நவம்பர் மாதம் போக்குவரத்துத்துறை அமைச்சர் சுவேந்து அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரைப்போல பல எம்எல்ஏக்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சி அளித்தனர்.
கடந்த மாதம் மேற்குவங்க மாநிலத்திற்கு அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுவேந்து அதிகாரியுடன், ராஜினாமா செய்த எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைந்தனர்.
இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், மேற்கு வங்க மாநில விளையாட்டுத்துறை அமைச்சருமான லட்சமி ரத்தன் சுக்லா இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதோடு தனது ஹவுரா மாவட்ட தலைவர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். அதே நேரத்தில் தனது எம்எல்ஏ பதவியை அவர் இதுவரைக்கும் ராஜினாமா செய்யவில்லை. சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் எதிர்முகாமிற்கு தாவி வருவது முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.