பாஜகவில் ஐக்கியமான திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ, கவுன்சிலர்கள்... மம்தாவுக்கு அடி மேல் அடி... !!
டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ மற்றும் கவுன்சிலர்கள் இன்று பாஜகவில் இணைந்தனர்.
மேற்குவங்கத்தில் லோக்சபா தேர்தலுக்கு பின்னர் பாஜகவின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. தேர்தல் முடிவுகள் அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
லோக்சபா தேர்தலில் பாஜகவின் கை ஓங்கி இருப்பதை பார்த்தவுடன், மம்தாவுக்கு டாடா காட்டி விட்டு எம்எல்ஏ.,க்கள் மற்றும் கவுன்சிலர்கள் பாஜகவில் ஐக்கியமாகி வருகின்றனர். கடந்த மாதம் தேர்தல் முடிவுக்கு பின்னர் இரண்டு எம்எல்ஏ.,க்களும், 50 கவுன்சிலர்களும் பாஜகவிற்கு தாவினர்.
மேற்குவங்க பாஜக தலைவர் முகுல் ராய் மகனும், திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ.,வாக இருந்தவருமான சுப்ரங்சு ராயும் பாஜகவிற்கு தாவிய எம்எல்ஏ.,க்களில் ஒருவர். மம்தா குறித்து காட்டமாக சில கருத்துக்களை கூறி விட்டு பாஜகவிற்கு சென்றார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், எம்எல்ஏ.,க்களை இழுப்பதற்கு பாஜக சதி செய்வதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து இன்று நவ்பாரா எம்எல்ஏ.,வாக பதவி வகித்து வரும் சுனில் சிங் இன்று பாஜகவில் ஐக்கியமாகி உள்ளனர். அவருடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 கவுன்சிலர்களும் இன்று பாஜகவில் இணைந்தனர்.
டெல்லியில் பாஜக தலைவர் விஜய் வர்கியா முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் அவர்கள் பாஜகவில் இணைந்தனர். பாஜகவிற்கு செல்வது குறித்து திரிணாமுல் எம்எல்ஏ சுனில் சிங் கூறுகையில்," மத்தியில் இருப்பது போன்று மேற்குவங்கத்திலும் பாஜக அரசு அமைய வேண்டும். அதற்காக பாடுபடுவோம்," என்று கூறி இருக்கிறார்.
லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடியை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில், லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு 18 இடங்கள் கிடைத்தது அவருக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. அத்துடன், தனது கட்சியை சேர்ந்த எம்எல்ஏ.,க்கள் மற்றும் கவுன்சிலர்கள் சாரை சாரையாக பாஜக பக்கம் படை எடுக்க துவங்கி இருப்பது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
ஒருபுறம் அரசு மருத்துவர்களின் போராட்டங்களால் கடும் நெருக்கடியில் தத்தளித்து வருகிறார் மம்தா பானர்ஜி. மறுபுறத்தில் தனது கட்சிக்காரர்கள் நேர் எதிரியாக கருதும் பாஜக பக்கம் தாவி வருவது அவருக்கு அரசியல் ரீதியில் நெருக்கடியை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.