மேற்கு வங்க மாநிலத்தில் பயங்கரம்.. திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ சுட்டுக் கொலை.. 3 பேர் கைது
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாஸ் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையில், திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆளும் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவரே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணாகஞ்ச் தொகுதி எம்எல்ஏவான சத்தியஜித் பிஸ்வாஸ், ஃபுல்பாரி என்ற பகுதியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற சரஸ்வதி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, மேடையில் இருந்து சத்தியஜித் பிஸ்வாஸ் கீழிறங்கிய போது, மர்ம நபர் ஒருவர் சத்தியஜித்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் துப்பாக்கி குண்டு சரியாக அவரின் உடலில் பாய்ந்தது. இதனால் துடிதுடித்து சத்தியஜித் பிஸ்வாஸ் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த கொலையின் பின்னணியில் பாஜக இருப்பதாக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
அக்கட்சியின் மாவட்ட தலைவர் கௌரி ஷங்கர் தத்தா இக்குற்றச்சாட்டை முன் வைத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. முகுல் ராய் என்பவரின் தொண்டர்கள்தான் இக்கொலைக்கு காரணம் என்று பகிரங்கமாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
ஆனால் மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
இதனிடையே, கொலை தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், கொலைக்கு பயன்படுத்திய உள்நாட்டு ரிவால்வர் ஒன்றை மீட்டுள்ளனர். இது திட்டமிட்ட கொலை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாசின் பின்பக்கம் இருந்து சுடப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.