பாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி!!
கொல்கத்தா: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு நாள் கூட ஆகாத நிலையில், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஒருவர் பாஜகவிற்கு தாவுவதற்கு தயாராகிவிட்டார்.
பீஜ்பூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக பதவி வகித்து வருபவர் சுப்ரங்சூ ராய். இவர் தொடர்ந்து இரண்டு முறை இத்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், அம்மாநில பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முகுல் ராயின் மகன்தான் சுப்ரங்சூ ராய்.
தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில், கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி, சுப்ரங்சூ ராயை திரிணாமுல் காங்கிரஸ் தலைமை 6 ஆண்டுகளுக்கு அதிரடியாக சஸ்பென்ட் செய்தது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சுப்ரங்சூ ராய் அலட்டிக் கொள்ளவில்லை. மேலும், பாஜகவில் இணைய இருப்பதாக கூலாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்," என்னால் இனி நிம்மதியாக மூச்சு விட முடியும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பலர் மூச்சுத் திணறலில் உள்ளனர். என் வழியை பின்பற்றி பலரும் பாஜகவில் சேர்வர்," என்று கூறி இருக்கிறார்.
என் மீது ஜோடிக்கப்பட்ட குற்ற வழக்குகள் பதியப்படலாம் அல்லது என் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என என் தந்தை எச்சரித்துள்ளார். அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் பாஜகவில் இணைய இருக்கிறேன்.
எனக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உரிய மரியாதை கிடைக்கவில்லை. புதிய இன்னிங்ஸை தொடங்க இருக்கிறேன். தற்போது வங்காளத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதை மட்டும் விரும்புகிறேன்.
திக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த 'அகோரிபாபா' மாயம்.. ம.பி.யில் பரபரப்பு
எனது தந்தை என்னை விட சிறப்பான நிர்வாகியாக கருதுகிறேன். அவர் மேற்குவங்கத்தின் சாணக்கியராக அழைக்கலாம் என்று தனது தந்தையை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். சுபரங்சூ ராயின் தந்தையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்தார்.
மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில், அவரது மகனும் தந்தை வழியில் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர இருக்கிறார். இவரைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் சிலர் பாஜகவிற்கு செல்லும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.