நாங்க ஜீன்ஸ் பேண்ட், டீ ஷர்ட்தான் போடுவோம்.. தெறிக்கவிடும் இளம் பெண் எம்பிக்கள்
மார்டன் ஆடையில்தான் வருவோம்.. இளம் பெண் எம்பிக்கள் அதிரடியாக கருத்து சொல்லி உள்ளனர்
சென்னை: "நாங்க ஜீன்ஸ் பேண்ட், டீ ஷர்ட் போடுவோம்.. அந்த டிரஸ் போட்டுட்டு பார்லிமெண்ட்டுக்கும் வருவோம்.. அது எங்க இஷ்டம்" என்று இரண்டு இளம் பெண் எம்பிக்கள் அதிரடியாக கொடுத்துள்ள போஸ் வலைதளங்களை தெறிக்க விட்டுள்ளது.
வழக்கம் போல ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர்கள் இதெல்லாம் டிரஸ்ஸா, இப்படிப் போடலாமா, கலாச்சாரம் கெட்டுப் போயிடாதா என்று குமுற ஆரம்பித்து விட்டனர். அரசியல்வாதிகளுக்கு என்று எந்த டிரஸ்-கோடும் இல்லை. அதிலும் பார்லிமெண்ட்டுக்கு இப்படித்தான் வரவேண்டும் என்றும் விதியும் ஏதும் இல்லை.
அதிலும் பெண் அரசியல்வாதிகள் ஜெயலலிதா, மாயாவதியின் ஆடைகள் அந்த சமயத்தில் பெரிதும் பேசப்பட்டது. புது மாடல், புது டிசைன், இப்படி அரசியல்வாதி ஆடை அணியலாமா என்றெல்லாம் பேச்சாக இருந்தது. ஆனாலும் அவர்கள் எதை பற்றியும் கவலைப்படவில்லை.
மிமி, ஜகான்
அதைப்போலதான் இரண்டு பெண் அரசியல்வாதிகள் இப்போது கிளம்பி உள்ளனர். மிமி சக்ரபோர்த்தி, நுஸ்ரத் ஜகான்! இவர்கள் இருவரும் வங்காள நடிகைகள்! மிமிக்கு 30 வயசு. ஜகானுக்கு 29 வயசு. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களாக போட்டியிட்டார்கள்.
வாயை அடைத்தனர்
ஜாதவ்பூர் தொகுதியில் மிமியும், பசிராத் தொகுதியில் நுஷ்ரத் ஜஹானும் களம் கண்டார்கள். இருவருமே 3 லட்சத்துக்கும் மேல வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டார்கள். எம்பி ஆகி விட்டார்கள். இருவரும் சமூக வலைதளத்தில் அவர்களின் ஆடைக்காக டிரோல் செய்யப்பட்டவர்கள். ஆனால் அதை இருவருமே பொருட்படுத்தவில்லை. மாறாக வென்று காட்டி வாயை அடைத்தனர்.
கருத்துக்கள்
இவர்கள் இருவரும் பார்லிமெண்ட்டுக்கு சென்றார்கள். போகும்போது, மாடர்ன் டிரஸ்ஸில்தான் சென்றனர். பார்லிமென்ட் முன்பு நின்று அடையாள அட்டையுடன் போட்டோவும் எடுத்து கொண்டு, தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டுவிட்டனர். இந்த போட்டோ வைரலாகிறது என்றாலும் இவர்கள் இருவரும் பதிவிட்ட கருத்துக்களும், பேட்டிகளும்தான் அதைவிட வேகமாக ரவுண்டு கட்டி வருகிறது.
|
மாற்றம்
மிமி சொல்கிறார், "நாங்க இளம் வயசு பெண்கள். அது ஏன் ஜீன்ஸ், டீ-ஷர்ட் அணியக்கூடாது? நாங்க என்ன டிரஸ் போட்டால் இவங்களுக்கு என்ன? குற்ற பின்னணி, ஊழல் கறையே இருந்தாலும், புனிதமாக ஆடைகளை அணிந்து வரும் பார்லிமென்ட் உறுப்பினர்களை பற்றி ஏன் யாரும் கவலைப்படுவதில்லை? மாற்றத்தை இளைஞர்கள் கொண்டு வருவார்கள். இதை மக்கள் ஏற்றுக் கொள்ள கொஞ்ச காலம் ஆகும். ஒரு ஆண் எம்பி ஜீன்ஸ் போட்டு வந்தால், அதை யாரும் எதிர்க்கறது இல்லை, இதுவே ஒரு பெண் ஜீன்ஸ் அணிந்து வந்தால் உடனே பஞ்சாயத்துதானா?" என்று கேட்டுள்ளார்.
புரிந்து கொள்ளுதல்
இதேபோலதான் ஜஹானும் சொல்கிறார், "இது ஒரு தொடர் போராட்டமாக இருக்கும். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். மாற்றத்தை மக்கள் புரிந்து கொள்ளும் நேரமிது. இது உடனடியாக நடக்க போவதில்லை என்றாலும், புரிந்துகொள்ளுதல் தொடங்கியுள்ளது" என்று கூறியுள்ளார்.
பார்லிமெண்ட்
முதலில் இவர்கள் 2 பேரும் பார்லிமென்ட்டில் எடுத்து கொண்ட போட்டோவை பார்த்ததும் சிலர் பேர் அதிர்ச்சி ஆனார்கள். சிலர் கண்டித்தார்கள், இப்படியெல்லாம் பார்லிமெண்ட்டுக்கு எம்பிக்கள் டிரஸ் போட்டு வரலாமா என்று கேள்வி கேட்டார்கள். ஆனாலும் இந்த இளம் எம்பிக்கள் அளித்த விளக்கம், கருத்துக்களை நிறைய பேர் வரவேற்று வருகிறார்கள்.
துணிச்சல்
அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு என்று இன்று தமிழக அரசு விதிகளை போட்டுள்ள நிலையில், இந்த நாட்டின் எம்பிக்கள், நாங்கள் இப்படித்தான் பார்லிமெண்ட்டுக்கு வருவோம் என்று துணிச்சலாக சொல்லி உள்ளது குறிப்பிடத்தக்கது.. அதை விட ஆண்களைப் பார்த்து குமுறாத இந்த இந்திய சமுதாயம்.. ஏன்தான் இப்படி பெண்களைப் பார்த்து புகைந்து தள்ளுகிறதோ என்ற அயர்ச்சியும் கூடவே வருகிறது.