மமதா கட்சி சுவேந்து அதிகாரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்-அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் ஐக்கியம்?
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சுவேந்தி அதிகாரி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் வருகை தரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்க சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியை வீழ்த்துவதில் பாஜக முனைப்புடன் உள்ளது.
இதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை வளைத்துப் போடுவதில் பாஜக தீவிரமாகவும் உள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி தொடர்ந்து கலகக் குரல் எழுப்பி வந்தார்.
இதன் அடுத்த கட்டமாக இன்று எம்.எல்.ஏ. பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார். அத்துடன் மேற்கு வங்கத்துக்கு வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் சுவேந்து அதிகாரி, பாஜகவில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பிளவுபடுத்த பாஜக முயற்சிக்கிறது; பாஜகவின் இந்த கனவு ஒருபோதும் நடக்காது என மமதா பானர்ஜி கடுமையாக கூறியுள்ளார். சுவேந்து அதிகாரியை முன்வைத்து மேற்கு வங்க அரசியலில் புதிய பிரளயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.