விவசாயிகளை தவறாக வழிநடத்துவது நீங்கதான்... மோடிக்கு, திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி!
கொல்கத்தா: மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் உதவிகளை மேற்கு வங்க அரசு தடுத்து வருவதாக பிரதமர் மோடி இன்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசு, பிரதமர் மோடி அரசு மேற்கு வங்க விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சித்து வருகிறது என குற்றம் சாட்டியது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு உதவுவதோடு நாட்டில் ஒப்பந்த விவசாயத்தை மேற்கொள்ளவும் உதவும் எனவும் திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் இன்று கலந்துரையாடினார். அப்போது அவர் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவி வருவதாகவும், ஆனால் மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கி வரும் உதவிகளை தடுத்து வருவதாவும் குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடியின் இந்த குற்றச்சாட்டுக்கு மேற்கு வங்க அரசு பதிலடி கொடுத்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி சவுகதா ராய் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி உதவி வழங்கும் திட்டத்தின் விவசாயிகளுக்கு வழங்கபப்டும் பண பலன்களை மேற்கு வங்க அரசு தடுத்ததாக பிரதமர் மோடி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணத்தை மேற்கு வங்க விவசாயிகள் இழக்கிறார்கள் என்று பாஜக பலமுறை கூறி வருகிறது.
இந்திய விவசாயிகள் போராட்டத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும்.. 7 எம்.பி.க்கள் பரபரப்பு கடிதம்
இது உண்மையல்ல. இந்த திட்டத்தில் கொடுக்கப்படும் பணத்தை நேரடியாக மாநில அரசுக்கு வழங்குங்கள். நாங்கள் விவசாயிகளுக்கு பணத்தை கொடுத்து விடுகிறோம் என முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசிடம் பலமுறை கூறிவிட்டார். ஆனால் மோடி அரசு அரசியல் பலன்களை அறுவடை செய்வதற்காக தவறாக குற்றசாட்டுகளை மேற்கு வங்கம் மீது கூறி வருகிறது. மேற்கு வங்க விவசாயிகளை பாஜக அரசு தவறாக வழிநடத்துகிறது. மேற்கு வங்க அரசு விவசாயிகளுக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறது.
'கிருஷக் பந்து' திட்டத்தின் கீழ், மாநில விவசாயிகளுக்கு ரூ.2,642 கோடியை வழங்கியுள்ளது, விவசாயத் துறைக்கு பட்ஜெட் ஒதுக்கீடு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு உதவுவதோடு நாட்டில் ஒப்பந்த விவசாயத்தை மேற்கொள்ளவும் உதவும். இந்த சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நாடளுமன்றத்தில் தவறாக நடந்து கொண்டது.
உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியது. இது சந்தையில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலை உயர்வை கடுமையாக ஏற்படுத்தி வருகிறது, இந்த விலையை மாநில அரசுகளுக்கு கட்டுப்படுத்த கடினமாகி வருகிறது என்று சவுகதா ராய் தெரிவித்தார்