தமிழக வக்கீல்கள் 8 பேர் சஸ்பெண்ட் விவகாரத்தை விசாரிக்கிறது கர்நாடக பார் கவுன்சில்
பெங்களூர்: தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை, கர்நாடக பார் கவுன்சிலுக்கு மாற்றி, இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஹைகோர்ட் வளாகத்தில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழை வழக்காடு மொழியாக்கும் விவகாரத்தில், வக்கீல்கள் சிலர், நீதிபதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி, கோர்ட் ஹாலுக்குள் புகுந்ததால் நீதிபதிகள் தொழில்பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்கு உத்தரவிட்டனர்.
இந்நிலையில், பாதுகாப்பு படையினர் மஃப்டி உடையில் நின்றபடி, பெண் வக்கீலை வீடியோ படம் எடுத்ததாக குற்றம்சாட்டிய சுமார் 8 வக்கீல்கள், திடீர் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில், பாதுகாப்பு படையினர் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. பொய்யாக, இதுபோன்ற குற்றச்சாட்டை வக்கீல்கள் வைப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை விசாரித்த பார் கவுன்சில், 8 வக்கீல்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இதுகுறித்து விசாரிக்க 3 நபர்கள் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான ராஜராஜன், வக்கீல்கள் சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும் என்றும், பாதுகாப்பு படையினர் மீது தவறு இருப்பதாக கூற வேண்டும் என்றும் தனக்கு தொடர்ந்து நெருக்கடி வருவதாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த புகாரையடுத்து, இப்பிரச்சினையை விசாரிக்க கர்நாடக பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளது, இந்திய பார் கவுன்சில். இந்திய பார் கவுன்சில் உத்தரவை ஏற்று விசாரணை நடத்த தயாராக இருப்பதாக கர்நாடக பார் கவுன்சில் கூறியுள்ளது. ஏற்கனவே, நீதிபதிகள் இருந்த ஹாலுக்குள் புகுந்த வக்கீல்கள் விவகாரமும், கர்நாடக பார் கவுன்சிலால்தான் விசாரிக்கப்பட்டிருந்தது. மேலும், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கும், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலும், கர்நாடக ஹைகோர்ட்டிலுமே விசாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.