காவிரி வாரியம் கோரி தமிழக எம்பிகள் அமளி... ராஜ்யசபா 3 முறை ஒத்திவைப்பு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக எம்.பி.கள் ராஜ்யசபாவில் தொடர் அமளியில் ஈடுபட்டதால் சபை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லி : மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழக அதிமுக மற்றும் திமுக எம்பிகள் ராஜ்யசபா தலைவர் இருக்கை அருகே சென்று முழக்கமிட்டதால் சபை 3 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே காவிரி, ஆந்திர சிறப்பு அந்தஸ்து, சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியானது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ராஜ்யசபாவில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியது முதலே ஆந்திரா சிறப்பு அந்தஸ்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத விஷயங்களை கண்டித்து தமிழகம் மற்றும் ஆந்திர எம்.பி.கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 20 நாட்களைக் கடந்து நாடாளுமன்ற செயல்பாடுகள் முடங்கியுள்ளன.
இந்நிலையில் இன்று ராஜ்யசபாவில் தலைவர் வெங்கய்ய நாயுடு இருக்கையை முற்றுகையிட்டு அதிமுக, திமுக எம்பிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். மற்றொரு புறம் தெலுங்குதேசம் எம்.பி.கள் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். தமிழகம், ஆந்திர எம்.பி.களின் தொடர் முழக்கத்தால் சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் பகல் 2 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடைய பிற்பகல் 2 மணிக்கு சபை மீண்டும் கூடிய போது எம்பிகளின் அமளி நீடித்ததால் மீண்டும் பிற்பகல் 2.45 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பிற்பகல் 2.45 மணிக்கும் சபை கூடிய போது எம்பிகள் மையமண்டபத்திற்கு வந்து முழக்கமிட்டதால் ராஜ்யசபா மீண்டும் 3.15 வரை ஒத்திவைக்கப்பட்டது.
எம்பிகள் சபையை நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வெங்கய்ய நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே காங்கிரஸ் கட்சியின் எம்பி குலாம் நபி ஆசாத், ராஜ்யசபாவில் காவிரி, ஆந்திர சிறப்பு அந்தஸ்து, சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியானது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மத்திய அரசு இந்த விவாதங்களை மறுப்பதாலேயே எம்பிகள் அமளியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.