கார்க்கில் பனிச்சரிவில் புதையுண்ட தமிழக வீரர் உடல் இன்று நெல்லை கொண்டு வரப்படுகிறது
திருவனந்தபுரம்: காஷ்மீரின் கார்கில் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் புதையுண்டு பலியான தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் விஜயகுமாரின் உடல் இன்று அவரது சொந்த ஊரில் சடலமாக மீட்கப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கார்கில் பனிச் சிகரம் 17,500 அடி உயரம் கொண்டது. இங்கு இந்திய ராணுவ முகாம் அமைத்து பாதுகாப்பு பணியில் வீரர்களை ஈடுபடுத்தி உள்ளது. கடந்த 17ம் தேதி இப்பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் மாயமாகினர். உடனடியாக அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
முதல் நாள் தேடுதல் வேட்டையில், சிப்பாய் சுஜித் பத்திரமாக மீட்கப்பட்டார். மோப்ப நாய், ரேடார், மெட்டல் டிடெக்டர்கள் மூலம் தேடுதல் பணி தீவிரமாக நடந்தது. இதில், 12 அடி ஆழ பனிச்சரிவில் விஜயகுமார் புதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
பின்னர் அவரது உடல் காஷ்மீரில் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அங்கிருந்து காஷ்மீர் விமானப்படை விமானத்தின் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டது. அங்கே முப்படை தளபதிகள், பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் அதிகாரிகள் விஜயகுமாரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பிறகு ராணுவத்திற்கு சொந்தமான தனி விமானம் மூலம் அவரது உடல் திருவனந்தபுரம் விமான தளத்திற்கு நேற்று இரவு சுமார் 10.45 மணியளவில் வந்து சேர்ந்தது. இன்று காலை 9.45 மணிக்கு அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் திருநெல்வேலிக்கு கொண்டுவரப்படும் அவரது உடல் அங்கிருந்து 12 மணி அளவில் ராணுவ வாகனத்தில் சொந்த ஊரான வல்லராமபுரத்திற்கு இறுதி அஞ்சலிக்காக கொண்டு செல்லப்படுகிறது.